கனவு பலித்தது!
'நாட்டின் சிறந்த 'போல் வாட்' வீராங்கனையாக வேண்டும் என்பது என் கனவாக இருந்தது.
'நாட்டின் சிறந்த 'போல் வாட்' வீராங்கனையாக வேண்டும் என்பது என் கனவாக இருந்தது. கடந்த மூன்று ஆண்டுகளாக தேசிய சாதனையை முறியடிக்க நான் கடுமையாக முயற்சி செய்து வந்தேன். அந்தத் தருணம் எனக்குச் சிலிர்ப்பூட்டுவதாக அமைந்தது.
நடுவில் காயம் ஏற்பட, சாதனை நிகழ்த்துவது தள்ளிப்போனது. பின்னர் அதிலிருந்து மீண்டு தேசிய சாதனையை முறியடித்திருக்கிறேன். என் கனவும் பலித்தது' எனப் பெருமை பொங்கக் கூறுகிறார், தமிழகத்தைச் சேர்ந்த கோல் ஊன்றித் தாண்டும் வீராங்கனை பரணிகா இளங்கோவன்.
புவனேசுவரத்தில் 2026, மே 3 -இல் நடைபெற்ற முதலாவது இந்திய உள்ளரங்கத் திறந்தநிலை ஒருங்கிணைந்த போட்டிகள் மற்றும் கோல் ஊன்றி உயரம் தாண்டுதல் போட்டியில், ஏற்கெனவே அவர் படைத்திருந்த தேசிய சாதனையை முறியடித்து தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
Advertisement
கடந்த மார்ச் கடைசி வாரத்தில் இதே மைதானத்தில் நடைபெற்ற முதலாவது தேசிய உள்ளரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் பரணிகா 4.22 மீட்டர் உயரத்தைத் தாண்டி தேசிய சாதனை படைத்திருந்தார். அண்மையில, 4.23 மீட்டர் உயரத்தைத் தாண்டி, தனது முந்தைய தேசிய சாதனையை பரணிகா மேம்படுத்தியுள்ளார்.
29 வயதான பரணிகா, தனது மூன்றாவது முயற்சியிலேயே 4.23 மீட்டர் உயரத்தைத் தாண்டியுள்ளார். தமிழகத்திலிருந்து தனது பயிற்சித் தளத்தை புவனேசுவரத்துக்கு மாற்றிக்கொண்டுள்ளார்.
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, அவரது இடது காலில் செய்யப்பட்ட தசைநார் சீரமைப்பு அறுவை சிகிச்சை, அவரது முன்னேற்றத்தில் தடையை ஏற்படுத்தியது. அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய மூன்று ஆண்டுகள் வலியுடன் போராடிய பிறகு, புவனேசுவரத்தில் உள்ள 'அபினவ் பிந்த்ரா செயல்திறன் இலக்கு மையத்தில்' அற்புதங்களை நிகழ்த்திய உடற்பயிற்சி சிகிச்சையாளர்களின் உதவியால் பரணிகா இளங்கோவனால் புதிய தேசிய சாதனையை நிகழ்த்த முடிந்தது.
'இது எனக்கு அமைந்த மற்றொரு சிறப்பான நாளாகும்' என்கிறார் பரணிகா இளங்கோவன்.