முகப்பு
தினமணி கதிர்

கரண்டிகளையும் சாப்பிடலாம்!

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகளால் தயாரிக்கப்படும் கரண்டிகளால் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்புண்டு.

Updated On : 10 மே 2026, 4:25 am IST
பகிர்:

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகளால் தயாரிக்கப்படும் கரண்டிகளால் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்புண்டு. இதனால் உலோகம், மக்கும் தன்மை கொண்ட கரண்டிகள் பயன்பாட்டில் உள்ளன.

இருப்பினும், சாப்பிட்டு முடித்தவுடன் உண்ணக்கூடிய கரண்டிகள், முள் கரண்டிகளை குஜராத் மாநிலத்துக்கு உள்பட்ட வதோதராவைச் சேர்ந்த பொறியாளர் குருவில் படேல் கண்டறிந்துள்ளார். பிளாஸ்டிக் சுமையை ஓரளவு குறைப்பதற்கான வழியை ஏற்படுத்தியுள்ள அவர், எட்டுச் சுவைகளில் கரண்டிகளைத் தயாரித்துள்ளார்.

அவர் கூறியது:

Advertisement

'பொறியியல் பட்டம் படிக்கும்போதே ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களுக்குப் பதிலாக உண்ணக் கூடிய கரண்டிகள், முள் கரண்டிகள் எப்படித் தயாரிக்கப்படுகின்றன என்பதைக் கேட்டறிந்தேன். அந்தக் கரண்டிகள் சாதாரண கரண்டிகளைப் போல் இருந்தாலும், அவற்றின் தரமும் சுவையும் திருப்திகரமாக இல்லை. சுவையாக இருக்கும் கரண்டிகளை உருவாக்கும் யோசனை எனக்குத் தோன்றியது.

பல மாதங்கள் தீவிர ஆராய்ச்சி, செய்முறைக்குப் பின்னர் 'திரிசூலா' என்ற நிறுவனத்தைத் தொடங்கினேன். பீட்ரூட், பசலைக்கீரை, சாக்லேட், மசாலா, மிளகு, புதினா, ஓமம், எளிய வகை என எட்டு தனித்துவமான சுவைகளில் கரண்டிகளைத் தயாரித்தேன்.

பல்வேறு வகையான மாவுகள், இயற்கையான நறுமண மசாலாப் பொருள்கள், சுவையூட்டிகளை ஒன்றாகக் கலந்து, ஈரப்பதத்தை முழுமையாக உறிஞ்சும் வகையில் மிக அதிக வெப்பநிலையில் 'பேக்' செய்யப்படும் இவை 100 சதவீதம் இயற்கையானவை. அவற்றில் எவ்விதமான பதப்படுத்திகளோ, செயற்கை சுவையூட்டிகளோ சேர்க்கப்படுவதில்லை. இந்தக் கரண்டிகள் தயாரிக்கப்பட்ட நாளிலிருந்து ஆறு மாதங்கள் வரை கெடாமல் இருக்கும்.

கரண்டிகளின் எண்ணிக்கை, சுவையைப் பொறுத்து விலை மாறுபடும். மொத்தமாக வாங்கினால் தள்ளுபடி உண்டு. சாக்லேட் சுவையுடைய கரண்டியின் விலை சற்று அதிகமாக இருக்கும்.

நான்கு மாதங்களிலேயே 'திரிசூலா' நிறுவனத்துக்கு நம் நாட்டில் மட்டுமல்லாமல் ஆஸ்திரேலியா, நார்வே, மலேசியா, தென் ஆப்பிரிக்கா போன்ற வெளிநாடுகளிலும் வாடிக்கையாளர்கள் உள்ளனர். ஒரு மணி நேரத்தில் 5,000 கரண்டிகளைத் தயாரிக்கும் திறன் கொண்ட புதிய உற்பத்தி நிலையம் உருவாகிறது. எதிர்காலத்தில் கரண்டிகள் மட்டுமின்றி உண்ணக் கூடிய தட்டுகள், கிண்ணங்களை தயாரிக்க உள்ளேன்' என்கிறார் குருவில் படேல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.