பாகவதர் நன்றாக வாழ்ந்த காலத்தில் சக நடிகர்கள் பலருக்கு வெளியில் தெரியாமல் நிதி உதவி செய்து வந்தார். !
சக்தி நாடக சபா அன்றைய தமிழகத்தில் முன்னணி நாடகக் கம்பெனி. இதை நம்பிப் பல நாடகக் கலைஞர்களின் குடும்பங்கள் வாழ்ந்தன. ஆனால், என்ன கெட்ட நேரமோ, சக்தி நாடக சபா பெரும் பொருளாதார வீழ்ச்சி கண்டது.
கம்பெனிக்காரர்கள் பாகவதரிடம் வந்து , "" தாங்கள் ஒரு நாள், எங்கள் நாடகக் கம்பெனிக்கு வந்து, ஒரு நாடகத்தை தலைமை தாங்கி நடத்தித் தர வேண்டும். தங்களைப் பார்க்கக் கூட்டம் வரும். அதற்கு டிக்கெட் கட்டணம் போட்டு வசூலித்து, ஓரளவு நிலையை சமாளித்து விடுவோம்'' என்றனர்.
கலைஞர்களின் நலன் கருதி ஒப்புக் கொண்ட பாகவதர், படப்பிடிப்பு வேலைகளுக்கு இடையிலும் திண்டுக்கலுக்கு விஜயம் செய்து, நாடக வசூலின் பொருட்டு, நாடகத்திற்கு தலைமை தாங்கிப் பேசினார். நாடகக் கம்பெனி நிதி நெருக்கடியிலிருந்து தப்பியது.
நடிகர் டி.ஆர். மகாலிங்கம் அப்போது பிரபலமாக விளங்கினார். அவர் தன் மகனைப் பள்ளியில் சேர்க்கும் தினத்தை ஒரு விழாவாகக் கொண்டாடினார். ஊரை அடைத்து பந்தல் போட்டு ஆயிரம் பேருக்கு விருந்து பரிமாறி, பாகவதரின் பாட்டுக் கச்சேரியையும் ஏற்பாடு செய்திருந்தார். பாகவதருக்கு அன்று பாட்டுக் கச்சேரி செய்வதற்கு தனது அன்பின் அடையாளமாக ஒரு கவரில் ஆயிரம் ரூபாய் வைத்து அவரிடம் கொடுத்தார் மகாலிங்கம். புறப்படும் போது பாகவதர் அந்தக் கவரில் இருந்த பணத்துடன் மேலும் ஒரு ரூபாய் வைத்து மகாலிங்கத்தின் புதல்வன் கையில் கொடுத்து விட்டு சென்றார்.