உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகி வரும் படம் "வா பகண்டையா'. விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் "வா பகண்டையா' என்ற கிராமம் தான் கதைக்களம் என்பதால், படத்திற்கு அதையே தலைப்பாக வைக்கப்பட்டுள்ளது. வா பகண்டையா கிராமத்தைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவனும், தடகள வீரனுமான ஹீரோவும், அதே கிராமத்தை சேர்ந்த மிராசுதாரரின் மகளான ஹீரோயினும் சிறு வயது முதலே நட்பாக பழகுகிறார்கள். பிறகு அதுவே காதலாக மலர, இருவரும் உயிருக்கு உயிராக காதலிக்கிறார்கள். ஹீரோவை இந்தியாவின் சிறந்த தடகள வீரனாக்குவதற்காக ஹீரோயின் போராடி வருகிறார்.அதே சமயம், வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த அவர்களின் காதலுக்கு அவர்களது சமூகம் எதிர்ப்பு தெரிவிக்க, வீட்டை விட்டு வெளியேறும் காதல் ஜோடி, தங்களது காதலை எதிர்ப்பவர்களை எதிர்த்து போராட, இறுதியில் அந்த போராட்டத்தில் வென்றார்களா, ஹீரோவின் லட்சியத்தை ஹீரோயின் நிறைவேற்றினாரா, என்பதே படத்தின் கதை. விஜய தினேஷ், ஆர்த்திகா, நிழன், யோகி ராம், ஆர்.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, மீரா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் எஸ்.ஏ.ராஜ்குமார். படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன.