தமிழில் பிரபல நடிகையாக வலம் வந்த நமீதா தற்போது குறைந்த அளவிலான படங்களிலேயே நடித்து வருகிறார். நமீதா கடைசியாக 2019- ஆம் ஆண்டு வெளியான "பொட்டு' படத்தில் நடித்தார். நமீதா தற்போது "நமீதா தியேட்டர்' என்ற பெயரில் புதிதாக ஓடிடி தளம் ஒன்றைத் துவங்கியுள்ளார். அந்தத் தளத்தில் உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் படங்கள் மட்டுமே வெளியாகும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் புதிய முயற்சி குறித்து பேசிய நமீதா, ""புதிதாக வரும் நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் இருவருக்கும் திரைத்துறையில் அவர்களின் அடையாளத்தை வெளிப்படுத்த உதவ விரும்பினேன். இந்த தளத்தின் மூலம், சிறிய தயாரிப்பாளர்கள் தங்கள் திரைப்படங்களை வெளியிட உதவுவோம். நமீதா தியேட்டரில் வெளியாக உள்ள முதல் படத்தைப் பற்றிய அறிவிப்பை வெளியிட நாங்கள் சரியான தருணத்தை எதிர்பார்த்திருக்கிறோம்'' என்று நமீதா தெரிவித்துள்ளார்.