பிள்ளை என்று இளமையில்
பெயரைப் பெற்ற தென்னையே
கொள்ளை இன்பம் மண்ணிலே
கொடுக்கும் "கற்பகத் தரு'வும் நீ!
வீட்டின் முன்னும் பின்னுமாய்
ஒன்று இரண்டாய் வளர்க்கிறார்!
காட்டில் மேட்டில் தோப்பென
காத்து நன்மை அடைகிறார்!
இளநீர்,தேங்காய்,எண்ணையாய்
ஏராளம் உந்தன் பயன்களாம்!
வளமாய் உணவில் சேர்ப்பதால்
சத்தும், சுவையும் அதிகமாம்!
குடிசைத் தொழில்கள் செய்திட
கொடுக்கும் மூலப் பொருள்களால்-கிடைக்கும்
கீற்று, கயிறு, துடைப்பங்கள்
கழிவும் விறகு ஆகுமாம்!
ஆண்டு முழுதும் காய்ப்பதால்
வளர்ப்போர் செல்வர் ஆகிறார்!
வேண்டும் வெளிநாட்டிற்கும்
விற்று வருவாய் தருகிறாய்!
வேரில் ஊற்றும் நீரினை
தலையில் தந்து மகிழ்வதால்
பாரில் நன்றி கூறிடும்
பணபிற்கு எடுத்துக் காட்டு நீ!
பெற்றோர் தம்மை வெறுத்திடும்
பிள்ளை இருக்கும் வீட்டிலே
உற்ற துணைவன் நீ என
உலகம் பழமொழி கூறுமாம்!
""உன்னை வளர்த்த உறவினை
உதவி செய்து காத்திடு!''
தென்னை தந்த பாடமாம்
தெரிந்து கொள்வீர் யாவரும்!
-அ.கருப்பையா
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.