ஓர் ஊரில் ஏழை ஒருவன் இருந்தான். அவன் மிகவும் நல்லவன். எல்லோரிடமும் அன்பு காட்டினான். எப்பொழுதும் இனிமையாகப் பேசுவான். திடீரென்று ஒரு நாள் அவன் இறந்து போனான். அவனை தேவதைகள் சொர்க்கத்துக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு அந்த ஏழைக்கு சிறப்பான வரவேற்பு எதுவும் இல்லை. சாதாரணமாக உள்ளே நுழைந்தான். அங்கு நிம்மதியாக காலத்தைக் கழித்தான்.
ஒரு நாள்....
செல்வந்தன் ஒருவன் சொர்க்கத்துக்குள் நுழைந்தான். அவனை வரவேற்க இசைக்கருவிகள் முழங்கின. தேவதைகள் வரிசையாக நின்றனர். அவன் கோலாகலத்துடன் சீரும் சிறப்புமாக வரவேற்கப்பட்டான். இதைப் பார்த்த அந்த ஏழை, "இந்தச் செல்வன் பூமியிலும் சிறப்பாக வாழ்ந்தான்! அவன் எண்ணங்கள் நிறைவேறின. இங்கும் அவனுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது! ஏன் எனக்கு இது போன்ற வரவேற்பு அளிக்கப்படவில்லை?.... சொர்க்கத்திலும் ஏற்றத்தாழ்வு உண்டா? இங்கு எல்லோரும் சமம் என்றல்லவா நான் நினைத்தேன்!....இந்தச் செல்வந்தனுக்கு மட்டும் ஏன் இந்த ஆர்ப்பாட்டமான வரவேற்பு?...எனக்கு மட்டும் இது போன்ற வரவேற்பு ஏன் இல்லை? ஏன் இப்படி?'' என்று ஒரு தேவதையிடம் கேட்டான்.
அதற்கு அந்த தேவதை, "உன்னைப் போன்ற ஏழைகள் இங்கு அடிக்கடி வருகிறார்கள்!....எங்களுக்குப் பழகிப்போன இயல்பான நிகழ்ச்சி அது! ஆனால் இவனைப் போன்ற செல்வந்தர்கள் எப்போதாவது பல ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் வருகிறார்கள்! மிகவும் அரிதான இந்த நிகழ்வை நாங்கள் கொண்டாடுகிறோம்! அதுதான் விஷயம்!''என்றது.
-ப.சரவணன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.