முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

ஓவியர்களின் ஓவியர்!

 புகழ் பெற்ற நவீன ஓவியரான மறைந்த ஏ.பி. சந்தானராஜ் கும்பகோணம் ஓவியக் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றிய காலங்களிலிருந்துதான் எனக்கு அறிமுகமானார். ஓவியக் கல்லூரி சென்று அவரது படைப்புகளைப்

Updated On : 26 டிசம்பர், 2023 at 6:24 AM
பகிர்:

 புகழ் பெற்ற நவீன ஓவியரான மறைந்த ஏ.பி. சந்தானராஜ் கும்பகோணம் ஓவியக் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றிய காலங்களிலிருந்துதான் எனக்கு அறிமுகமானார். ஓவியக் கல்லூரி சென்று அவரது படைப்புகளைப் பார்த்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். ஒருநாள், கேன்வாஸின் அழகிய வெள்ளைப் பரப்பில் தனது தூரிகையால் ஒரு கரும்புள்ளி வைப்பதில் அவருக்கு தயக்கம் இருந்ததைக் கண்டேன். கேன்வாஸின் வெள்ளைப் பரப்பை கொஞ்சமும் சிதைக்காத கரும்புள்ளி வைக்கும் இடத்தை அவர் தேடிக் கொண்டிருந்தார். இங்கும் அங்குமாகப் புள்ளிகளை வைக்கத் தொடங்கினார். அந்தப் புள்ளிகளை ஒருங்கிணைத்து அற்புதமான கோட்டோவியம் ஒன்று வரைந்திருந்தார். அவ்வோவியம் ஒரு பெண்ணின் உருவமாக இருந்தது.

 அழகழகான வடிவில் பெண்கள், குளத்தில் நீந்தும் பெண்கள், நிலக் காட்சிகளுக்கிடையே பெண்கள் என்றெல்லாம் அக் கோட்டோவியங்களை ஒரு தொடராக வரையத் தொடங்கினார் சந்தானராஜ். கல்லூரியில் வேலை பார்த்த பேராசிரியர்கள் சிற்பி வித்யாசாகர் ஸ்தபதி, ஓவியரான அல்போன்சோ, வரதராஜன், விஸ்வநாதன், ரெங்கராஜன், மனோகரன் போன்றோர்கள் அவருடைய அறைக்குச் சென்று புத்தம் புதிய அவரது படைப்புகளைப் பார்த்து ரசிக்கத் தொடங்கினர். கல்லூரி வளாகம் முழுதும் அவரது ஓவியப் படைப்புகள் குறித்தே பேச்சு.

 கும்பகோணமும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களும் ஓவியர் சந்தானராஜைக் கவர்ந்த இடங்களாகும். அங்குள்ள கைவினைஞர்கள் செய்யும் போகசக்தி அம்மன், ரிஷபதேவர், நடராஜர், விநாயகர் போன்ற செப்புத் திருமேனிகளை ரசித்த வண்ணம் இருப்பார். கல்லூரி எதிரே விரிந்து பரந்து கிடக்கும் வயல் வெளிகள், அறுவடைக் கதிர்கள், கதிர் அடிக்கும் நெற் கதிர்கள், சிறு குன்றுபோல் குவிந்திருக்கும் வைக்கோல் போர்கள் போன்றவற்றை அழகிய கோட்டோவியங்களாக வடிப்பார். திருவண்ணாமலையில் பிறந்து, (1932) டேனிஷ் பள்ளியில் படித்து, ஆங்கிலப் பேச்சையே சரளமாகக் கொண்ட இவரிடம் அருணகிரிநாதரின் திருப்புகழைக் கேட்பது வியப்பாகத்தானே இருக்கும்?

Advertisement

 சந்தானராஜ் நவீன ஓவியர்களின் ஓவியராகத் திகழ்ந்தார். இன்று உலக அளவில் புகழ்பெற்ற நவீன ஓவியரான எம்.எஃப்.உசேன் சென்னை வரும்போதெல்லாம் சந்தானராஜின் வீட்டுக்குச் சென்று அவரது ஓவியங்களைப் பார்க்கத் தவறுவதில்லை. இந்திய அளவில் வளர்கலை முன்னோடிகளாகத் திகழ்ந்த ஓவியர் கே.சி.எஸ். பணிக்கர், சிற்பி தனபால் ஆகியோரின் மாணவரான சந்தானராஜ் பிற்காலத்தில் பிரண்டே, சுஜிரியோ, ஜே.சுவாமிநாதன், சந்தோஷ், சத்தீஷ் குஜ்ரல், லஷ்மண் கெüவுட், லஷ்மண் பை, ஆதிமூலம், ஆர்.பி. பாஸ்கரன் போன்ற வளர்கலை கலைஞர்களுள் இந்திய அளவில் தாமும் குறிப்பிடத்தக்க கலைஞராகத் திகழ்ந்தார். இவ்வழியில் சந்தானராஜ் படைத்த பகற்பொழுது நிலக்காட்சி, நீர்க்காட்சி ஓவியங்கள் லண்டனில் நடைபெற்ற காமன் வெல்த் கலைவிழாவின் கண்காட்சியில் இடம் பெற்றதோடல்லாமல் இந்தியாவில் பாராளுமன்றம் லலிதா கலா அகடமி அருங்காட்சியகம் மற்றும் பல உலக அருங்காட்சியகங்களில் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருவது தமிழருக்குப் பெருமை சேர்ப்பதாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments