முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

காலத்தால் மறையாத கலைச்சிற்பம்!

நான் ஒரு ஓவியன் அல்ல, எனது தொழில் ஓவியமும் அல்ல, என்று அடிக்கடி கூறிக் கொண்டிருந்த மைக்கேலேஞ்சலோவால்தான் உலகின் தலை சிறந்த ஓவியங் களைப் படைக்க முடிந்தது. உலகப் புகழ் பெற்ற இவர் ஓவியனா, சிற்பியா என்றால

Updated On : 25 டிசம்பர், 2023 at 3:40 PM
பகிர்:

நான் ஒரு ஓவியன் அல்ல, எனது தொழில் ஓவியமும் அல்ல, என்று அடிக்கடி கூறிக் கொண்டிருந்த மைக்கேலேஞ்சலோவால்தான் உலகின் தலை சிறந்த ஓவியங் களைப் படைக்க முடிந்தது. உலகப் புகழ் பெற்ற இவர் ஓவியனா, சிற்பியா என்றால் இரண்டுமேதான். இருப்பினும் தான் ஒரு மாபெரும் சிற்பி என்றே பெருமிதம் கொண்டான் மைக்கேலேஞ்சலோ. ஆம். ஒரு மாபெரும் சிற்பி, ஓவியன், கட்டட கலைஞன்.  அது மட்டுமல்ல. ஒரு கவிஞனும்கூட.

ரோமின் வாட்டிகன் நகர சிஸ்டைன் தேவாலயக் கூரையின் ஆலய விமானத்தின் உட்புறச் சுவர்களில் காணப்படும் அமரச் சித்திரங்கள் ஆஞ்சலோவின் படைப்பு. இந்த ஓவியங்களை எப்படித் தீட்டினான் தெரியுமா? ஆலயத்தின் உத்தரத்திலிருந்து தொங்கவிடப்பட்ட பெரிய தூளிகளில் அவன் படுத்தபடியே இக் கூரை ஓவியங்களைப் படைத்தான். கடவுளின் படைப்புக்குப் பிறகு மறக்க முடியாத மனிதப் படைப்புகள் அவை.

1504இல் மைக்கேலேஞ்சலோ டேவிட் என்னும் சலவைக் கல் சிற்பம் ஒன்றை செய்தான். வேதாகமத்தில் வீரமகனாகச் சித்திரிக்கப்பட்ட டேவிட்டை ஓர் அற்புதமான சலவைக் கல் சிற்பமாகச் செதுக்கினான் மைக்கேலேஞ்சலோ. ஆண் வாலிபன் ஒருவனின் யெüவனம் ததும்பும் உடல் கல்லில் உயிர்த் தெழுந்தது. தசைத் திரட்சி கிளர்ந்தெழும் வீரிய உடல் பார்த்தோ ரை பிரமிக்க வைத்தது. இச்சிற்பம் பிளாசா வெச்சியோ என்ற இடத்தில் பிரமாண்டமாக நிறுத்தப்பட்டது. சிற்பத்தில் உடலின் அழகுக் கூறுகளை வடிப்பது என்பது அக்காலத்தில் கடலை நீந்துவதற்கு சமமாகக் கருதப்பட்டது. சிற்பக் கலை எனும் கடலில் அவன் நீந்தி வெற்றி கண்டான். சுருள் சுருளான தலைமுடி, நீண்ட மூக்கு, அழகிய கண்கள், நீண்ட தாடை, விரிந்த மார்பு, திரண்ட தோளும் தடக் கையும்  காலும் காண்போரை வியக்க வைத்தது.

Advertisement

 ஆண் உடல் வடிப்பதில் மிகச் சிறந்த சிற்பியாக கருதப் பட்டான் மைக்கேலேஞ்சலோ.

மைக்கேலேஞ்சலோ வடித்த மற்றொரு சிற்பமான "ஏசுவை மடியில் ஏந்திய மேரி'  உலகின் தலைசிறந்த சிற்பமாகக் கருதப்படுகிறது. மேரியின் கண்களில் கருணையை அருளைக் கொண்டுவருவதற்காக நூற்றுக்கணக்கான மனிதக் கண்களை உற்று உற்று நோக்கிக் கலைத் தவம் செய்தான் மைக்கேலேஞ்சலோ. கல்லில் வடித்த கண், கருணையின் ஊற்

றாயிற்று. இந்த அதியத்தைப் பார்த்து தானே வியந்தான். அந்தக் கலை அனுபவத்தை அவன் கவிதையாகவும் வடித்தான்.

மேரியின் மடியில் நீண்டு கிடந்த ஏசுநாதரின் உடல் வாடி வதங்கிய ஒரு மலர் தொங்குவது போல மேரியின் உடலில் கிடக்கிறது. சிறிய உடை ஒன்று ஏசுவின் உடலை இடையின் நடுவே ஓடி மறைத்துள்ளது. மேரியின் உடல் ஆடைச் சுருக்கங்கள் அச்சு அசலாக வளைந்து நெளிந்து பார்ப்பவரை பிரமிக்க வைக்கிறது. காலத்தால் மறையாத பேரழகுடன் இன்றும் இச் சிற்பம் ஒரு கண்கொள்ளாக் காட்சியாக இருப்பதாக இன்றைய புகழ் பெற்ற சிற்பிகள் கூறுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments