மும்மொழியும் என் மொழி!
சன் டிவியில் இரவு ஒன்பது மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர் "தென்றல்'. இத்தொடரில் தமிழரசு குடும்பத்தின் மூத்த மருமகளாக வந்து ரசிகர்களின் சாபத்தை வாங்கி கட்டி கொள்ளும் சுதாவை சந்தித்தோம். பெங்க
சன் டிவியில் இரவு ஒன்பது மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர் "தென்றல்'. இத்தொடரில் தமிழரசு குடும்பத்தின் மூத்த மருமகளாக வந்து ரசிகர்களின் சாபத்தை வாங்கி கட்டி கொள்ளும் சுதாவை சந்தித்தோம். பெங்களூருவைச் சேர்ந்த அவரின் நிஜப்பெயர் பவ்ய கலா. கன்னடம், தெலுங்கு, தமிழ் என்று மூன்று மொழியிலும் படுபிசியாக இருக்கும் அவருடன் உரையாடினோம்.
"தென்றல்' தொடரில் நடிக்கும் அனுபவம் பற்றி சொல்லுங்களேன்?
"தென்றல்' தொடரில் எனக்கு முழு வில்லத்தனமான கதாபாத்திரம் இல்லை என்றாலும் கொஞ்சம் நெகடிவ்வான ரோல்தான், பொதுவாக ஒவ்வொரு வீட்டிலும் நடக்கும் மாமியார், மருமகள் சண்டை, ஈகோ, பிரச்னைதான் தென்றல் தொடரிலும் நடக்கிறது. அந்த வீட்டுக்கு மூத்த மருமகள் நான். புதிதாக வரவிருக்கும் பணக்கார சின்ன மருமகள் மீது பாசம் காட்டும் மாமியாரைப் பழிவாங்குவதற்காக அந்தத் திருமணத்தை நிறுத்த பல வகையில் முயற்சி செய்வேன். ஆனால் திருமணம் தானாகவே நின்றுவிடும்.
நெகட்டீவ் கேரக்டர் செய்யப் பிடித்திருக்கிறதா?
மென்மையான கதாபாத்திரத்தைவிட, இதுபோன்ற கேரக்டர் செய்வதுதான் எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது. என்னதான் வலுவான கதாபாத்திரமாக இருந்தாலும் மென்மையாக நடிக்கும்போது அந்த
அளவுக்கு மக்களிடம் அங்கீகாரம் கிடைப்பதில்லை. அதுவே வில்லத்தனம் என்றால் உடனே ரீச் ஆகிவிடுவோம்.
வேறு என்ன தொடர்களில் நடிக்கிறீர்கள்?
"கஸ்தூரி' தொடரில் நடித்திருக்கிறேன். அதையடுத்து "தங்கம்' தொடரில் ரம்யாகிருஷ்ணனின் கணவராக வரும் கலெக்டருக்கு முறைப் பெண்ணாகக் கிராமத்து வேடம் செய்கிறேன். அதில் கங்கா-கலெக்டர் காதலுக்காக என் வாழ்க்கையை விட்டுக் கொடுத்துவிட்டுப் போய்விடுவது போன்ற கதாபாத்திரம்.
இதற்கு முன்பு தொடர்களில் நடித்திருக்கிறீர்களா?
நான் முதன் முதலில் கன்னட தொடர்களிலும் படங்களிலும் நடித்து கொண்டிருந்தேன். பிறகு தெலுங்கில் ஜெமினி டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாகவும், தொடர்களிலும் நடித்து வருகிறேன். அதன் பிறகு தமிழில் மெகா டிவியில் "சுற்றமும் நட்பும்' என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினேன். அதுதான் தமிழில் எனது முதல் புராஜக்ட். அதை அடுத்து "ருத்ரா' தொடரில் குஷ்புவின் தங்கையாக நடித்துள்ளேன். அதன் பிறகு "கோலங்கள்' தொடரில் ஒரு பாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இப்போது தென்றலிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.
உங்களைப் பற்றி?
என்னுடைய சொந்த ஊர் ஆந்திரம். ஆனால் ரொம்ப நாள் முன்பே பெங்களூருவில் செட்டில் ஆகிவிட்டோம். அதனால் இப்போது கன்னடவாசி என்றும் சொல்லலாம். தொடர்களில் நடிப்பதற்காக பெங்களூருவில் இருந்து சென்னைக்கும் ஆந்திரத்துக்கும் வந்து போகிறேன்.
சென்னை, ஆந்திரம், பெங்களூரு என்று பயணம் செய்து கொண்டே இருப்பது சிரமமாக இல்லையா?
ஆரம்பத்தில் கொஞ்சம் கடினமாகத்தான் இருந்தது. இருந்தாலும் நடிக்க வேண்டும் என்ற ஆசையோடு வருவதனால் இப்பொழுது பழகிவிட்டது. அவ்வளவாக சிரமம் தெரியவில்லை.