சிநேகாவும் நமீதாவும் துவக்கி வைத்த ஜவுளிக்கடை, நகைக்கடைகளில் வியாபாரம் அமோகமாக நடக்கிறதாம். இந்த ராசி காரணமாக இருவருக்கும் படங்களில் நடிக்க வாய்ப்பு வருகிறதோ இல்லையோ கடைகளைத் திறக்க மாதத்துக்கு மூன்று அழைப்புகளாவது வந்துவிடுகிறதாம். இவர்களும் மகிழ்ச்சியாக கடைகளைத் திறந்துவைத்து போஸ் கொடுக்கிறார்கள் சில லகரங்களைப் பெற்றுக்கொண்டு.
தொலுங்கு ரசிகர்களால் "ஹாட் கேக்' எனக் கொண்டாடப்படும் தீக்க்ஷô சேத், சிம்புவுடன் "வேட்டை மன்னன்', விக்ரமுடன் "ராஜபாட்டை' படங்கள் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இதுவரை ஐந்து ஹிட் படங்களில்தான் நடித்திருக்கிறார். ஆனாலும் அதற்குள்... "தெலுங்கிலும் தமிழிலும் ஹீரோக்களுடன் டூயட் பாடி நடிப்பது போரடித்துவிட்டது. ஆக்ஷன் நாயகியாகத்தான் நடிக்க எனக்கு ஆசை' என்கிறார்.
தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுத்து வரும் இயக்குநரின் புதிய படத்தில் சத்யராஜுக்கு வில்லனாக நடிக்க அழைப்பு வந்திருக்கிறது. வில்லனாக நடிக்க வேண்டும் என்றால் ரூ.1 கோடி சம்பளம் எனக் கொங்கு மொழியில் "கூல்' ஆக கூறியிருக்கிறார். அந்த "கோ' இயக்குநரும் கோபப்படாமல் சென்றுவிட்டாராம். வில்லன் வேடம் என்றால் ரூ.1 கோடி; கதாநாயகன் வேடம் என்றால் அதில் பாதி எனக் கொள்கை வைத்திருக்கிறாராம் "வில்லாதி வில்லன்'.
தரமான படம் என வாகை சூடிய போதும் வசூலில் அந்தப் படம் காலை வாரி விட்டதால் தயாரிப்பாளர் பெரும் நஷ்டத்துக்கு ஆளாகியுள்ளார். இதை அறிந்த படத்தின் நாயகன் விமல், தன்னுடைய சம்பளத்தோடு தான் இரண்டு படங்களுக்காகப் பெற்ற அட்வான்ஸ் தொகையையும் சேர்த்து ரூ.40 லட்சம் வரை தயாரிப்பாளருக்குக் கொடுத்திருக்கிறார். மேலும் ஒரு புதிய படத்தில் நடித்துக் கொடுப்பதாகவும் வாக்கு கொடுத்து தயாரிப்பாளருக்கு உதவியிருக்கிறார்.
கதாநாயகியாகத்தான் நடிப்பேன் என்று கூறி வந்த முன்னாள் முன்னணி நடிகை சிம்ரனுக்கு அக்கா, அண்ணி வேடங்கள்தான் கிடைத்தன. மீண்டும் உடலை ஸ்லிம் ஆக்கிக்கொண்டு கதாநாயகி வேடத்துக்கு வலை விரித்தார். ஒரு டி.வி. நிகழ்ச்சிதான் கிடைத்தது. இப்போது கன்னடப் படம் ஒன்றில் கன்னட சூப்பர் ஸ்டார் உபேந்திராவுக்கு அம்மாவாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.
பிரபுதேவா இயக்கத்தில் விஷால் நடித்த "வெடி' புஸ்வாணமாகிவிட்டதால் படம் பெரிய நஷ்டத்துக்குள்ளானது. இதையடுத்து திரு இயக்கத்தில் நடிக்கும் "சமரன்' படத்தில் தன்னுடைய சம்பளத்தில் பாதியை அதாவது சுமார் ஒன்றரை கோடியைக் குறைத்துக்கொண்டுள்ளார்.
சூர்யாவுக்கென ஒரு ஸ்பெஷலான காமெடி ஸ்கிரிப்ட்டை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு. அவருடைய கால்ஷீட் கிடைக்காத பட்சத்தில் அவருடைய தம்பி கார்த்தியை நடிக்க வைக்கவும் முடிவு செய்திருக்கிறார். அண்ணன் நாயகனாக நடித்தால் தம்பி கெஸ்ட் ரோலிலும் தம்பி நாயகனாக நடித்தால் அண்ணன் கெஸ்ட் ரோலிலும் நடிப்பார்கள் என்கிறது வெங்கட் பிரபு வட்டாரம்.
தொழில்நுட்பத்துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்திய ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர் மறைந்த ஸ்டீவ் ஜாப்ஸின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது. தனது சுய சரிதையை தனது நண்பர் வால்டர் ஜக்சனுடன் இணைந்து எழுதியிருந்தார் ஸ்டீவ் ஜாப்ஸ். அந்தப் புத்தகம் நவம்பர் 21-ம் தேதி வெளியாகிறது. இந்தப் புத்தகத்தை மையமாக வைத்து அவருடைய வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது. இதற்கான உரிமையை சோனி நிறுவனம் பெற்றுள்ளது.
தீபாவளி ரேஸில் ஆறு படங்கள் கலந்துகொள்ளவிருந்தன. ஆனால் சூர்யா நடிக்கும் "ஏழாம் அறிவு', விஜய் நடிக்கும் "வேலாயுதம்' படங்கள் அதிக திரையரங்குகளை ஆக்கிரமித்துக்கொண்டதால் மற்ற படங்கள் வெளியாகவில்லை. அதற்கு பதிலாக 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே அரிதாக அமையும் 11.11.11 தேதியில் மற்ற படங்கள் வெளியாகின்றன. அவற்றில் சிம்புவின் "ஒஸ்தி', தனுஷின் "மயக்கம் என்ன' போன்ற படங்கள் ஸ்டார் வேல்யு பெற்றவை. இந்தத் தேதியின் முக்கியத்துவத்தை அறிந்த வேறு சில நிறுவனங்களும் இதே தேதியில் தங்களது படங்களை வெளியிட ஆர்வம் காட்டி வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.