"களவாணி', "வாகை சூட வா' படங்களை இயக்கிய சற்குணம் தன்னுடைய அடுத்த படத்துக்கு "சொட்ட வாளைக்குட்டி' எனப் பெயரிட்டுள்ளார். முழுக்க முழுக்க காமெடியை மையமாக வைத்து உருவாகும் இந்தப் படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார்.தலைப்பு பற்றி கேட்டால்... ""நம்முடைய மொழியில் உள்ள வட்டார வழக்குச் சொற்கள் அழிந்துகொண்டே வருகின்றன. அவற்றை இளைஞர்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே இது போன்ற தலைப்புகளை வைக்கிறேன்'' என்கிறார்.
படத்தின் தலைப்பை மட்டும் நல்ல தமிழில் வைத்துவிட்டு படம் முழுக்க ஆங்கில வார்த்தைகளையும் வசனங்களையும் பயன்படுத்துவது இயக்குநர் கெüதம் மேனனின் வழக்கம். அந்த வகையில் அவர் தயாரிக்கும் புதிய படத்துக்கு "தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும்' என்ற பெயரைத் தேர்வு செய்திருக்கிறார். இதில் ஜெய் கதாநாயகனாக நடிக்கிறார்.
"நம்ம ஊரு நல்ல ஊரு' படத்தின் மூலம் ராமராஜனை அறிமுகப்படுத்தியவர் வி.அழகப்பன். அதையடுத்து சில படங்களைத் தயாரித்துவிட்டு திரைத்துறையில் இருந்து ஒதுங்கிவிட்டார். தற்போது அவருடைய மகன் யுவராஜ் அழகப்பன் "கலியுகம்' படத்தின் மூலம் இயக்குநர் ஆகிறார். சசியிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் கை கொடுக்க ஒரு நெகிழ்ச்சியான கதையோடு களமிறங்குகிறார் யுவராஜ். இந்தப் படத்தில் தாஜ் நூர், சித்தார்த் விபின், எஸ்.என்.அருணகிரி என மூன்று இசையமைப்பாளர்கள் இணைந்து பணியாற்றியுள்ளனர்.
"ஃபோர்ப்ஸ்' பத்திரிகை ஆண்டுதோறும் வெளியிடும் "சக்தி வாய்ந்த பிரபலங்கள்' பட்டியலில் கடந்த ஆண்டு ஐம்பதாவது இடத்தில் இருந்த பாப் பாடகி ஜெனீஃபர் லோபஸ் இந்த ஆண்டு முதலிடத்தைப் பெற்றுள்ளார். ரூ.280 கோடி ஆண்டு வருமானம், சூப்பர் ஹிட் ஆல்பங்கள், ட்விட்டரில் 70 லட்சத்துக்கும் மேற்பட்ட ஃபாலோயர்ஸ் போன்றவைதான் முதலிடத்துக்குக் காரணம்.
"மங்காத்தா' படத்தையடுத்து வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் சூர்யா நடிப்பதாக இருந்தது. "சிங்கம் 2' படப்பிடிப்பு காரணமாக அந்தத் திட்டத்தைத் தற்காலிகமாக ஒத்தி வைத்துவிட்டார் சூர்யா. இதையடுத்து அவருடைய தம்பி கார்த்தியுடன் கைகோர்க்கிறார் வெங்கட்பிரபு. "பிரியாணி' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் வெங்கட் பிரபுவின் வழக்கமான "கம்பெனி ஆர்ட்டிஸ்டுகள்' இடம்பெறுகிறார்கள். பாலிவுட்டின் பிரபல நாயகிகளுள் ஒருவர் கதாநாயகியாக நடிப்பார் எனத் தெரிகிறது.
"வழக்கு எண் 18/9' படத்தையடுத்து லிங்குசாமி தயாரிக்கும் புதிய படத்துக்கு "ரோமியோ ஜூலியட்' என பெயரிடப்பட்டுள்ளது. "ரேணிகுண்டா' படத்தை இயக்கிய பன்னீர்செல்வம் இயக்குகிறார். புதுமுகம் வினோத் கதாநாயகனாகவும் "கும்கி' படத்தில் நடித்துள்ள லட்சுமி கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
மணிரத்னத்தின் "கடல்', சீனு ராமசாமியின் "நீர்ப்பறவை', சுப்பிரமணியசிவாவின் "உலோகம்' ஆகிய மூன்று படங்களும் கடலையும் அதன் சுற்றுப்புறத்தையும் கதைக் களமாகக் கொண்டு உருவாகி வருகின்றன. இந்த மூன்று படங்களுக்கும் எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுதுகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.