முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

மூவரின் வெற்றிப் பயணம்!

பெண்களும் பல சாதனைகளை நிகழ்த்தி வரும் காலமிது. ஹாக்கி, கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளில் பெண்களின் சாதனைகள் குறிப்பிடத்தக்கவையாகும்.

Updated On : 26 ஜனவரி, 2014 at 8:17 AM
பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 9:44 AM

பெண்களும் பல சாதனைகளை நிகழ்த்தி வரும் காலமிது. ஹாக்கி, கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளில் பெண்களின் சாதனைகள் குறிப்பிடத்தக்கவையாகும். கேரம், செஸ் என அமர்ந்து விளையாடும் விளையாட்டுகளில் மட்டுமில்லாது, வாள்சண்டை, நீச்சல்போட்டி, கபடிப் போட்டி, வாலிபால் உள்ளிட்ட உடல் உழைப்பு விளையாட்டுகளிலும் பெண்கள் சாதனை புரிந்து வருகிறார்கள். விருதுநகர் க்ஷத்திரிய பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் ஒன் படிக்கும் மாணவிகள் மூன்று பேர், உத்திரபிரதேச மாநிலம் ஜான்பூரில் நடைபெற்ற 22ஆவது மினி தேசிய வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக அணிக்காக விளையாடி, இரண்டாமிடம் பெற்று வெள்ளிப் பதக்கம் வாங்கி தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார்கள்.
 12பேர் விளையாடும் இந்த வாலிபால் போட்டியில் ஒரே ஊரை, ஒரே பள்ளியைச் சேர்ந்த மூன்று மாணவிகள் என்.சோபி, கே.பிரபாவதி, எம்.சக்திநிவேதிதா தமிழக அணியில் பங்கேற்று விளையாடியது குறித்துச் சொல்கிறார்கள்:
 ""நாங்கள் ஆறாம் வகுப்பு படிக்கும்போது, ஏதாவது ஒரு விளையாட்டில் சேர வேண்டும் என ஆசிரியர்கள் கூறினார்கள். நாங்கள் எங்கள் பெற்றோர்களின் ஆலோசனைப்படி வாலிபால் விளையாட்டில்
 சேர்ந்தோம்.
 இந்த விளையாட்டு, உடலுக்கும் மனத்திற்கும் உறுதியளிக்கும் விளையாட்டு. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்போல, உடலுக்கும் மனத்திற்கும் நல்லது என எண்ணி இந்த விளையாட்டைத் தேர்வு செய்தோம்.
 பள்ளிகளுக்கிடையிலான வட்டம், மாவட்டம், மண்டலம் ஆகிய பிரிவு போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெற்றுள்ளோம். பின்னர் திருநெல்வேலியில் நடைபெற்ற , தமிழகப்பள்ளிகளுக்கிடையிலான மாநில அளவிலான வாலிபால் போட்டியில் ,(17வயதுக்குட்பட்டோர், பெண்கள்பிரிவு) எங்கள் பள்ளிசார்பில் விளையாடிய குழுவில் இடம்பெற்று மூன்றாமிடம் பெற்றோம்.
 அந்த வெற்றி, எங்களுக்குத் தூண்டுகோலாக இருந்தது. மேலும் வெற்றி பெற வேண்டும் என்ற ஊக்கமும் வந்தது. இந்த விளையாட்டின்மீது ஆர்வம் ஏற்பட்டது.
 பின்னர் பல மாநில அளவிலான வாலிபால் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றோம்.
 சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் தமிழக அணிக்குத் தேர்வு நடைபெற்றது. அதில் எங்கள் பள்ளி மாணவிகள் 5 பேர் சென்று கலந்து கொண்டோம். தேர்வுப்போட்டியில் வெற்றி பெற்று நாங்கள் மூவரும், தமிழக அணிக்குத் தேர்வு செய்யப்பட்டோம்.
 இதனால் எங்களுடைய பொறுப்பு இன்னும் அதிகமாகிவிட்டது என நினைத்தோம். தமிழக அணியில் இடம்பிடிப்பது என்பது மிகவும் சிரமமானதாகும். எப்படியும் தமிழக அணிகோப்பையை கைப்பற்றும் என்ற நம்பிக்கையோடு இருந்தோம். அதிலிருந்து தீவிரப் பயிற்சி பெறத் தொடங்கினோம்.
 ரமேஷ் என்பவர் எங்களுக்குப் பயிற்சி அளித்தார். பள்ளி விளையாட்டு மைதானத்தில், காலை, மாலை இருவேளையும் பயிற்சி பெறுவோம். காலையிலே பள்ளிக்கு வந்துவிடுவதால் பள்ளி நிர்வாகம் எங்களுக்கு சரிவிகித உணவு வழங்கும். மாலையிலும் பயிறுவகைகள் வழங்கப்படும். எங்களது தலைமை ஆசிரியை ராஜசௌந்தரி, நாங்கள் பயிற்சி பெறுவதைப் பார்த்து, ஊக்கப்படுத்துவார்கள்.
 வெளி ஊர்களுக்கு விளையாடச் செல்லும்போது ஆகும் செலவை பள்ளி நிர்வாகம் வழங்கிவிடும். பெற்றோர்களும் எங்களை ஊக்கப்படுத்தி வருகிறார்கள். எனவே நாங்கள் வெற்றி என்பதை மட்டும் மனதில் இருத்தி விளையாட முடிகிறது.
 உத்திரபிரதேசத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான இறுதிப்போட்டியில் மேற்கு வங்க அணியுடன் மோதினோம். அந்த அணியிலும் மிகச்சிறந்த விளையாட்டு வீராங்கனைகள் இருக்கிறார்கள் என தொடக்கத்திலேயே தெரிந்து கொண்டோம். எனினும் வெற்றி பெறுவோம் என நினைத்து ஒருங்கிணைந்து செயல்பட்டு விளையாடினோம்.
 முழுசக்தியை உபயோகித்து விளையாடினோம். எனினும் இரண்டாமிடம் பெற்றது எங்களுக்கு சற்று வருத்தம்தான்.
 எதிர்காலத்தில் இந்திய அணிக்காக நாங்கள் விளையாட வேண்டும்'' என மூவரும் கோரஸôக கூறினார்கள்.

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.