கலைப் பொருள்களில் கலைநயம்!
கடந்த பதினைந்து ஆண்டுகளாக கலைப்பொருட்கள் செய்யும் பயிற்சி வகுப்பு நடத்தி வருகிறார் செல்வி திலீபன். இளம் வயதிலேயே பயிற்சி ஆசிரியராகிவிட்ட இவர், 50க்கும் மேற்பட்ட கலைப்பொருட்கள் உருவாக்குவதில் கைதேர்ந்தவர்.
கடந்த பதினைந்து ஆண்டுகளாக கலைப்பொருட்கள் செய்யும் பயிற்சி வகுப்பு நடத்தி வருகிறார் செல்வி திலீபன். இளம் வயதிலேயே பயிற்சி ஆசிரியராகிவிட்ட இவர், 50க்கும் மேற்பட்ட கலைப்பொருட்கள் உருவாக்குவதில் கைதேர்ந்தவர். புதுப்புது மாடல்களையும், விதவிதமான வடிவங்களையும் செய்து சாதனைப் புரிந்து வரும் இவரைச் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தோம்:
""எட்டாவது படிக்கும் போதிலிருந்தே எனக்கு கலைப்பொருட்கள் செய்வதில், கை வேலைகள் செய்வதில் ஆர்வம் அதிகம். இதனால் படித்துக் கொண்டிருக்கும் போதே விடுமுறை நாட்களில் கிராஃப்ட் பயிற்சி வகுப்புகளுக்குச் சென்று கற்றுக் கொண்டு வீட்டில் விதவிதமாகக் கலைப்பொருட்கள் செய்து வைப்பேன். ப்ளஸ்டூ முடித்ததும், கிராஃப்ட் பயிற்சி வகுப்புகள் எடுத்துக் கொண்டே அஞ்சல் வழியில் எம்.காம் வரை படித்தேன்.
திருமணத்திற்கு பிறகு குடும்பம், குழந்தைகள் என வந்துவிட்டதால் கிராஃப்ட் வேலைகள் செய்ய போதிய நேரம் இல்லாமல் இருந்தேன். இந்நிலையில் என் கணவரின் தொழிலில் ஒரு நேரம் போல் ஒருநேரம் வருமானம் இருக்காது. எனவே, கூடுதலாக வேறு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தார்.
இதனால் கிராஃப்ட் கிளாஸ் துவங்கும் ஐடியாவைப் பற்றி சொன்னேன். அவருக்கும் பிடித்திருந்ததால் சரி என்றார். மீண்டும் பயிற்சி வகுப்புகள் எடுக்க ஆரம்பித்தேன். அதில்
டெய்லரிங்கில் துவங்கி ஜுவல்லரி செய்வது, பொம்மைகள் செய்வது, 3டி மியூரல் ஓவியங்கள், மெழுவர்த்தி, எம்போஸிங் ஓவியங்கள், பானை ஓவியம், காகித உறைகள், கண்ணாடி ஓவியம், போன்ஸôய் மரங்கள், நிப் ஓவியம், காபி ஓவியம், வர்லி ஓவியம், மதுபனி ஓவியம், டைல்ஸ் ஓவியம் என கிட்டதட்ட 54 வகையான கலைப்பொருட்கள் செய்யும் பயிற்சி அளித்து வருகிறேன். மேலும் இந்தப் பொருட்களைச் செய்து விற்பனையும் செய்து வருகிறேன்.
நான் செய்யும் கலைப்பொருட்களை விற்பனை செய்வது, அவற்றிற்கு தேவையானவற்றை வாங்கித் தருவது, என என் கணவர் மிகவும் உதவியாக இருக்கிறார். அதுபோன்று எங்கள் இருவரின் குடும்பத்தாரும் மிகவும் ஒத்துழைப்பு தருவதால்தான் என்னால் இந்த தொழிலில் முழுமையாக ஈடுபட்டு புதுப்புது வடிவங்களை உருவாக்க முடிகிறது.
வருங்காலத்தில் கலைப்பொருட்கள் செய்யும் தொழிலை பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்றும் ஆசை இருக்கிறது. அதற்கான முயற்சிகளில் தற்போது ஈடுபட்டு வருகிறோம். நிச்சயம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆசைக்காகவும், விளையாட்டாகவும் கற்றுக் கொண்ட கைவேலைகள் இன்று எங்கள் வாழ்க்கைக்கு ஆதாரமாகிப் போனது சந்தோஷமாக இருக்கிறது'' என்றார்.