காலணிகளை சுத்தம் செய்து உதவும் புகைப்படக் கலைஞர்
பணம் இருப்பவரிகளிடம் உதவும் மனமில்லை. மனம் இருப்பவர்களிடம் உதவ பணம் இருப்பதில்லை.
பணம் இருப்பவரிகளிடம் உதவும் மனமில்லை. மனம் இருப்பவர்களிடம் உதவ பணம் இருப்பதில்லை. இதில் இரண்டாவது வாசகங்களுக்குச் சொந்தக்காரர் பாப்புராஜ். நெல்லையைச் சேர்ந்த இவர் காலணிகளை சுத்தம் செய்து அதில் கிடைக்கும் பணத்தைப் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுத்து உதவியவர். இவரது சேவையை மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் பாராட்டி நற்சான்று வழங்கியுள்ளார்.
பாப்புராஜ் ஒரு புகைப்படக் கலைஞர். தனது ஓய்வு நேரங்களில் பள்ளி, கல்லூரி இருக்கும் பகுதிகளுக்குச் சென்று மாணவர்களின் காலணிகளை சுத்தம் செய்து கொடுத்து அதில் கிடைக்கும் பணத்தில் இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டவர்கள், கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தன்னால் முடிந்த உதவிகளைச் செய்து வருகிறார். சமீபத்தில் அவர் செய்த சேவை சற்று நெகிழ்வை ஏற்படுத்தியுள்ளது. பாளையங்கோட்டை சிறை கைதிகள் தயாரித்த 4 ஆயிரம் முகக்கவசங்களைப் பெற்று அதனை மக்களிடம் விற்று அதில் கிடைத்த லாபத்தில் நெல்லை அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த 30 பாவை கூத்து கலைஞர்களின் குடும்பங்களுக்கு உதவி செய்துள்ளார்.
இனி பாப்புராஜ் பேசுகிறார்:
""நான் வீரவநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவன். என்னுடைய சிறுவயதிலேயே தந்தை காலமாகிவிட்டார். கஷ்டப்பட்டுத்தான் பத்தாம் வகுப்பு வரை படித்தேன். எங்கள் கிராமத்தில் எந்த வீட்டில் விசேஷ நிகழ்ச்சி நடந்தாலும், அழைக்காமல் சென்று விடுவேன். ஆனால் நான் சாப்பாட்டிற்காகத் தான் வந்துள்ளேன் என்பதைத் தெரிந்து கொண்டு விரட்டிவிடுவார்கள். வாழ்க்கை எனக்கு வறுமையை தான் கற்றுக் கொடுத்தது. படித்து முடித்தவுடன் எந்த வேலையும் செய்யத் தயாராக இருந்தேன். ஆனால் யாரும் வேலை கொடுக்க தயாராகயில்லை. ஆனாலும் சிறு சிறு வேலைகள் செய்தேன். ஒரு கட்டத்தில் புகைப்படத் தொழில் நுட்பத்தைக் கற்றுக்கொண்டு அந்தத் தொழிலில் இறங்கிவிட்டேன்.
எனக்கு மாதம் வருமானம் 6 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். அதில் ஒரு பகுதியை ஏழைகளுக்கு உதவுவதற்காக எடுத்து வைத்துவிடுவேன். ஆண்டுக்கு ஒரு முறை மாற்றுத்திறனாளிகளுக்கு என்னால் முடிந்த உபகரணங்களை வாங்கி வழங்கி வருகிறேன்.
மற்றவர்களிடம் நிதி பெற்று உதவுவதை விட நம்முடைய உழைப்பால் கிடைக்கும் வருமானத்தை இயலாதவர்களுக்குக் கொடுத்து உதவி செய்ய வேண்டும் என்பது என்னுடைய நோக்கம். குஜராத்தில் நில நடுக்கம் ஏற்பட்ட போதும், தானே புயல் தாக்கத்தின் போதும் என்னால் முடிந்த சிறு உதவிகளைப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பியுள்ளேன். கஜா புயலின் போது பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று மாணவர்களின் காலணிகளை சுத்தம் செய்து, கிடைத்த பணத்தை அரசிடம் வழங்கினேன்.
கரோனா பெருந்தொற்று பலரது வாழ்வாதாரத்தையும், வாழ்க்கையையும் புரட்டிப் போட்டு விட்டது. ஆனால் இந்த முறை பள்ளி, கல்லூரிகள் அடைக்கப்பட்டதால் அங்கு சென்று காலணிகளை சுத்தம் செய்ய முடியவில்லை. எனவே இந்த முறை உதவி செய்யும் முறை மாறிவிட்டது. ஒரு சில நேரங்களில் அவசரப்பட்டுச் செய்த தவறால் சிறையிலிருக்கும் கைதிகளுக்குக் கடந்த 10 ஆண்டுகளாகப் பல நற்பணிகளைச் செய்து வருகிறோம். அவர்களுக்கு மன நல மருத்துவர், மன நல ஆலோசனைகளை வழங்கி வருகிறோம். அவர்களின் எதிர்காலத்துக்கும், அவர்களின் குடும்பத்துக்காகவும் ஒரு வருமானத்தை ஏற்படுத்திக் கொடுக்க விரும்பி தொழிற்பயிற்சிகளை வழங்கி உள்ளோம். தற்போது அவர்கள் தயாரித்த 4 ஆயிரம் முகக்கவசங்களை வாங்கினேன். என்னுடைய பணி நேரம் போக மீதியுள்ள நேரத்தில் முகக்கவசம் விற்பனை செய்தேன்.
விவரத்தை எழுதி விற்பனை: இந்த முகக்கவசங்களை யாரிடம் பெற்றேன். எதற்காக இந்த வியாபாரம்? விற்ற பணத்தை யாருக்கு வழங்கவுள்ளேன் என்பதைத் தெளிவாக ஒரு அட்டையில் எழுதி என் கழுத்தில் தொங்கவிட்டுவிடுவேன். இதைப்பார்க்கும் பொதுமக்கள் ஒரு முகக்கவசத்தை வாங்கிவிட்டுக் கூடுதலாகப் பணத்தைக் கொடுத்தார்கள். இப்படியாகப் பணம் கொடுத்து உதவியவர்கள் ஏராளம் . வீட்டில் குழந்தைகளுக்குப் பால் வாங்குவதற்குக் கூட காசில்லாமல் கஷ்டப்பட்ட பாவை கூத்து கலைஞர்களின் குடும்பத்திற்கு முடிந்தளவு சமையல் செய்து சாப்பிடுவதற்கான பொருள்களை வாங்கிக் கொடுத்தேன்.
என்னை வருத்தி மற்றவர்களுக்கு உதவினால் எனது குடும்பம் சந்தோஷமாக இருக்கும் என்று நம்புகிறேன்'' என்கிறார் பாப்புராஜ்.