முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

சிற்பத்திற்குள்  சிற்பங்கள்

சிந்தையில் உதித்த சிறப்பான கற்பனை வளத்தினை காணும் கண்கள் ரசிக்கும் வண்ணம் தனது எண்ணங்களுக்கு உயிர் தந்து கல்லில் கலையை ஆள்பவன் சிற்பியாவான்.

Updated On : 20 செப்டம்பர் 2020, 6:00 am IST
பகிர்:

சிந்தையில் உதித்த சிறப்பான கற்பனை வளத்தினை காணும் கண்கள் ரசிக்கும் வண்ணம் தனது எண்ணங்களுக்கு உயிர் தந்து கல்லில் கலையை ஆள்பவன் சிற்பியாவான்.
பல ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்று மலர்ந்த மலராக ஆலயங்கள் தோறும் அலங்கரித்து வரும் இச்சிற்பக் கலையானது உலக வாழ்வியலின் உண்மையை உணர்த்தும் ஓர் ஒப்பற்ற பாடப் புத்தகமாகும் என்று சொன்னால் அது மிகையாகாது.
சில ஆலயங்களில் காணப்படும் சிற்பங்கள் வியக்கத்தக்க வகையில் வித்தியாசமாக வடிக்கப்பட்டுள்ளன.
அப்படி அற்புத வகையில் வடிக்கப்பட்ட சிற்பத்துக்குள் சிற்பங்கள் சில நமது தமிழகத்தில் உள்ளன.
அவை திருச்சிராப்பள்ளி மாவட்டம் உறையூர் ஸ்ரீபஞ்சவணேஸ்வரர் ஆலயம் , திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி வைஷ்ணவ நம்பி ஆலயம் , திருவண்ணாமலை மாவட்டம் தேவிகாபுரம் ஸ்ரீபெரியநாயகி அம்மன் ஆலயம் ஆகிய திருக்கோயில்களில் அமையப்பெற்றுள்ளன.
மற்ற கோயில்களில் காணும் சிற்பங்களில் இல்லாத சிறப்பு இம்மூன்று கோயில்களில் காணும் சிற்பங்களில் உண்டு.

எட்டாம் நூற்றாண்டில் இரண்டாம் வரகுணபாண்டியன் வழிபட்ட திருச்சி உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் ஆலயத் தூண் புடைப்பு சிற்பங்களில் நளின மங்கை பலர் இணைந்து ஓர் வடிவாக அமையப்பெற்றுள்ள சிற்பங்களில் மூன்று சிறப்பானவையாகும்.

ஒன்று - பத்து மங்கையர்கள் இணைந்துள்ள யானை வடிவத்தின் மீது அமர்ந்த மன்மதன் கரும்பு வில்லில் காம அம்பை ஏற்றி ஆயத்தமாக உள்ள சிற்பம், இரண்டவதாக - ஐந்து மங்கை வடிவங்கள் இணைந்துள்ள குதிரை உருவமும், அதன் மீது மன்மதன் கரும்பு வில்லில் காம அம்பு விட ஆயத்தமாக உள்ள சிற்பம், மூன்றாவதாக - நான்கு மங்கை வடிவங்கள் இணைந்து குதிரை உலா வரும் சிற்பம். சிற்பத்துக்குள் சிற்பமாக அமைந்துள்ளன.

Advertisement

Advertisement

பல்லவ மாமன்னர்களும், சோழ மாமன்னர்களும் வழிபட்ட தொண்டை மண்டலத்திலுள்ள தேவிகாபுர அம்மன் ஆலயத்தில் காணப்படும் தூண் புடைப்பு சிற்பத்தில் ஒன்பது மங்கை வடிவங்கள் இணைந்து யானை உருவமும், அதன் மீது மன்மதன் கரும்பு வில்லில் காம அம்பு விட ஆயத்தமாக உள்ள சிற்பம் - சிற்பத்துக்குள் சிற்பமாக அமைந்துள்ளதும், மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்திலுள்ள 108 திவ்யதேசங்களில் ஒன்றான திருக்குறுங்குடி நம்பி ஆலயத்தின் புறப்பகுதியில் அமையப்பெற்றுள்ள பல அழகிய கிளிகளின் வடிவங்கள் இணைந்து யானை மற்றும் குதிரை வடிவ சிற்பங்கள் சிற்பத்துக்குள் சிற்பமாக அமைந்துள்ளதும் சிற்பக் கலையில் கூடுதல் சிறப்பாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.