ஹிப் ஹாப் ஆதியின் புது முயற்சி
இசையமைப்பாளர், நடிகர், பாடகர் எனப் பன்முகம் கொண்ட ஹிப் ஹாப் ஆதி 2019-ஆம் ஆண்டு தமிழ் எழுத்து வடிவத்தின் பரிணாமம் குறித்து "தமிழி' என்ற ஆவணப்படத் தொடரை வெளியிட்டிருந்தார்.
இசையமைப்பாளர், நடிகர், பாடகர் எனப் பன்முகம் கொண்ட ஹிப் ஹாப் ஆதி 2019-ஆம் ஆண்டு தமிழ் எழுத்து வடிவத்தின் பரிணாமம் குறித்து "தமிழி' என்ற ஆவணப்படத் தொடரை வெளியிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது தொல்லியல் அகழ்வாராய்ச்சி தொடர்பாக ஒரு ஆவணப்படத்தை உருவாக்கியுள்ளார்.
"2016-இல் தொடங்கி 2019 - ஆம் ஆண்டு வரை நான்கு வருடம் தமிழ் எழுத்துகள் எவ்வாறு உருவானது என்பது பற்றிய ஒரு வரலாற்று ஆவணப்படத்தை உருவாக்கினோம். அது எல்லா தரப்பிலும் வரவேற்பு பெற்றுத் தந்தது. இந்த ஆவணப்படம் முடியும் தருவாயில் "பொருநை' என்ற தமிழ் தொல்லியல் ஆராய்ச்சி ஆவணப்படம் உருவாக்குவது பற்றி முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டோம்.
2021-ஆம் ஆண்டில் தமிழக அரசு சார்பில் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் தமிழர்களின் தொல்லியல் ஆராய்ச்சியைக் கண்டறிய பல்வேறு இடங்களைத் தேர்வு செய்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ள பணிகள் தொடங்கிய போது, அவர்களது அனுமதியுடன் அந்தப் பணிகளை ஆவணப் படமாக்க 2021 முதல் படப்பிடிப்பைத் தொடங்கினோம்.
Advertisement
இந்த ஆராய்ச்சியில் நிச்சயம் பெரிய கண்டுபிடிப்புகள் இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருத்து கூறி வந்தனர். எங்களுக்கும் அந்த நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கை இந்த ஆராய்ச்சியில் உண்மையானது. கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு தமிழக முதல்வர் மு. க.ஸ்டாலின் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில். உலக அளவில் பழமை வாய்ந்த இரும்பு கலாச்சாரம் தொடங்கியது தமிழ் மண்ணில் இருந்து தான் என்ற கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டது குறித்து அறிவித்தார்.
இந்த அறிவிப்பு உலகையே தமிழகம் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது. ஆனால் இதற்கு முன்பு இரும்பு கண்டுபிடிக்கப்பட்டது துருக்கி நாட்டில் உள்ள ஒரு பகுதியில் என்று குறிப்பிடப்பட்டு வந்தது. தற்போது அந்த வரலாறு மாறி இருக்கிறது. இரும்பு கண்டுபிடிக்கப்பட்டது அதாவது பழமையான இரும்பு கலாசாரம் தமிழகத்தில் தான் தோன்றியது என்ற வரலாற்று உண்மை வெளியாகி இருப்பது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது' என்றார்.