நீலத் திமிங்கிலத்தின் பாடலோசை...
திமிங்கிலத்தின் ஓசைதான் உலக விலங்கு வகைகளிலேயே அதிக ஓசையாகும்.
திமிங்கிலத்தின் ஓசைதான் உலக விலங்கு வகைகளிலேயே அதிக ஓசையாகும். அதாவது, 188 டெசிபல் என்ற அளவில் இருக்கும். நீருக்கு அடியில் எழுப்பும் இந்த ஓசையை மனிதனால் கேட்க முடியாது. ஒரு ஜெட் எஞ்ஜின் எழுப்பும் சத்தமாகும் இது.
'லோ ப்ரீக்வென்சி' எனப்படும் அதிர்வெண் ஓசை என்பதால், 1,600 கிலோ வரை கேட்கும். அதன் இதயம் ஒரு காரின் அளவு போல இருக்கும். அதன் இதயத் துடிப்பை இரண்டு மைலுக்கு அப்பால் இருந்தும் கேட்கலாம்.
அறுபது வருடங்களில் ஒரு திமிங்கிலம் 33 டன் கார்பன் டை ஆக்ஸைடை உறிஞ்சி வைத்துக்கொள்கிறது. அது இறந்து கடலுக்கடியில் மூழ்கி விட்டால் அந்த கார்பன் டை ஆக்ஸைடு பல நூறு ஆண்டுகள் பூட்டி வைக்கப்பட்ட நிலையை அடைகிறது.
இதனால் மனித குலத்துக்கு எவ்வளவு நன்மை. உணவு சங்கிலித் தொடரை நிலையாக நிலை நிறுத்துவதும் நீலத் திமிங்கிலங்கள்தான். சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாப்பதும் அவைதான்.
உலகில் சுமார் 25 ஆயிரம் நீலத் திமிங்கிலங்கள் வாழ்கின்றன என்று இன்டர்நேஷனல் யூனியன் ஃபார் கன்ஸர்வேஷன் ஆஃப் நேட்சரின் அறிக்கை கூறுகிறது. திமிங்கிலத்தின் எண்ணெய்க்காக அவற்றைக் கொல்வது கடந்த நூறாண்டுகளில் அளவுக்கு அதிகமானது. சுமார் 3.80 லட்சம் திமிங்கிலங்கள் இதற்காகக் கொல்லப்பட்டன என்பது திடுக்கிட வைக்கிறது.
தற்போது கடல் முழுவதும் புவி வெப்பமயமாதலால், உஷ்ண அலைகளால் பாதிக்கப்படுவதால் மீன்கள் கூட்டம் அருகி விட்டது. இதனால் நீலத் திமிங்கிலங்களுக்கு உணவுப் பற்றாக்குறை வேறு ஏற்பட்டு விட்டது.
ஒரு திமிங்கிலத்தின் எடை சுமார் 200 டன். பிறந்த குட்டித் திமிங்கிலத்தின் எடை 2,700 கிலோ. நீளம் 8 அடி ஆகும். வளர்ந்தபோது இதன் நீளம் 108 அடியாக இருக்கும். இதன் ஆயுள் காலம் 90 முதல் 110 ஆண்டுகள் ஆகும்.
மணிக்கு 31 மைல் வேகத்தில் இது நீந்தும். இதற்கு சுவாசிப்பதற்காக மனிதனுக்கு இருப்பது போல உடலின் மேல் ஒரு துவாரம் இருக்கிறது. உணவு உண்ணும்போது இதன் வாயில் போகும் நீர் மட்டும் 5 ஆயிரம் கிலோ எடை இருக்கும். இதன் நாக்கு ஒரு யானை அளவு இருக்கும்.
புவி வெப்பமயமாதலாலும், திமிங்கிலத்தை அதன் எண்ணெய்க்காக வேட்டையாடும் போக்கினாலும் அவை அருகி வருகின்றன. ஒரு திமிங்கிலத்தின் விலை என்ன தெரியுமா? பல்லாயிரக்கணக்கான மரங்களின் விலைதான் அது. சுமார் இருபது லட்சம் அமெரிக்க டாலர்கள் தான் அதன் விலை (இந்திய மதிப்பில் 17.52 கோடி ரூபாய்).
'அரிய கடல் வாழ் உயிரினமான நீலத் திமிங்கிலத்தின் பாடல் ஓசை குறைந்துகொண்டே வருகிறது' என்கிற திடுக்கிட வைக்கும் உண்மையை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அதாவது, இதன் எண்ணிக்கை குறைந்துவருவதே முக்கிய காரணம் என்றும் அவற்றைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும்; எச்சரித்துள்ளனர். ஆகவே தான் திமிங்கிலத்தின் பாடலைத் தொடர்ந்து கேட்க உலகம் ஆசைப்படுகிறது.