FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

நேரத்தை வீணடிக்கக் கூடாது!

'நாட்டைவிட்டு நாடு வந்தாலும் நேரத்தை வீணடிக்க மாட்டேன். எட்டு மணி நேரப் பணி.

Updated On : 16 நவம்பர் 2025, 12:04 am IST
பகிர்:

பொ.ஜெ.

'நாட்டைவிட்டு நாடு வந்தாலும் நேரத்தை வீணடிக்க மாட்டேன். எட்டு மணி நேரப் பணி. மற்ற நேரத்தில் கற்பித்தல், இணைய வகுப்புகளை எடுத்தல், தமிழ்ப் பணி, சுற்றுலா என்று வாழ்க்கையைக் குடும்பத்துடன் ரசித்து வாழ்கிறேன்' என்கிறார் மீனாட்சிசுந்தரம் சுதர்சன்.

சிறுநீரக உறுப்புகளை இயந்திரங்களில் குணப்படுத்துபவர், கல்லூரி விரிவுரையாளர், விவசாயி, எழுத்தாளர், கவிஞர் உள்ளிட்ட பன்முகத் தன்மைகளுக்குச் சொந்தக்காரர் மீனாட்சிசுந்தரம் சுதர்சன். டொரான்டோவில் வசித்து வரும் இவர், கனடா தமிழ்நாடு கலாசார அமைப்பின் தலைவராகவும் இருந்தவர்.

Advertisement

Advertisement

அவரிடம் பேசியபோது:

'எனது பூர்விகம் புதுக்கோட்டை மாவட்டம். நான் பிறந்தது, படித்தது சென்னையில்தான். பொறியியல் பட்டம் பெற்றுவிட்டு, 3 ஆண்டுகள் மருந்து நிறுவனத்தில் பணியாற்றினேன். பின்னர், சவூதி அரேபியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் தலா 3 ஆண்டுகள் பணியாற்றினேன். பிறகு, கனடாவுக்குப் புலம்பெயர்ந்து, 25 ஆண்டுகளாக அங்கு வசித்துவருகிறேன். எனது மனைவி விஜயலட்சுமி மருத்துவர். மகன் ப்ரணவன்.

கனடாவுக்கு வந்தபோது, முதலில் வேலை கிடைக்கவில்லை. இங்குள்ள கல்லூரியில் சிறுநீரகவியல் சார்ந்த ஓராண்டுப் படிப்பை முடித்தேன். தற்போது டொரான்டோவில் உள்ள மருத்துவமனையில் சிறுநீரகச் செயலிழப்பு பிரச்னைகளை இயந்திரங்களில் குணப்படுத்துகிறேன்.

சிறுநீரக நோயாளியின் ரத்தம் 4 மணி நேரம் தொடர்ந்து இயந்திரத்தில் சுத்திகரித்து சரி செய்து திருப்பி அனுப்பப்படும் நுணுக்கமான செயல்பாட்டை மேற்கொள்கிறேன். சிறு தவறு நிகழ்ந்தாலும், நோயாளிக்கு குணமற்ற நிலை உருவாகி உயிரிழப்பும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

2008இல் கல்லூரி ஒன்றுக்கு சிறுநீரகப் பொறியியல் பாடத் திட்டங்களை எனது குரு முகேஷ் கஜாரியாவுடன் இணைந்து நான் உருவாக்கினேன். இதற்கு கனடா தொழில்நுட்ப கல்வித் துறை அங்கீகாரத்தை அளித்தது. அன்றிலிருந்து இந்தக் கல்லூரியில் பாடங்களை நான் கற்பித்து வருகிறேன்.

மற்றொரு கல்லூரியில் சிறுநீரக உறுப்புகளை எப்படி உபயோகப்படுத்துவது? எப்படி மருத்துவம் செய்ய உட்படுத்துவது என்பது குறித்து இரு மாத குறுகிய பட்டப் படிப்புகளை இணைய வழியாக எடுத்து வருகிறேன்.

கனடா தமிழ்நாடு கலாசார அமைப்பில் உறுப்பினராகச் சேர்ந்து, பல பதவிகளை வகித்து, 2014இல் தலைமைப் பதவியை வகித்தேன். அப்போது, 'முத்தமிழ் பாடசாலை'யை தமிழ்நாடு பாடத் திட்டத்தின்படி தொடங்கினேன். தற்போது 300 மாணவர்கள் நேரடியாகவும், இணைய வகுப்பிலும் பங்கேற்கின்றனர். அதனுடன் யோகா, சிலம்பம் போன்றவையும் இணைக்கப்பட்டுள்ளன. தமிழ் மொழியின் ஆளுமையை அதிக அளவில் பெற்றிருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு விரைவில் இன்னும் பல திட்டங்கள் தொடங்க இருக்கிறேன்.

கனடாவில் நவம்பர் முதல் மார்ச் வரை கடும் குளிர். ஏப்ரலில் தட்பவெப்ப நிலை சிறிது, சிறிதாக உயரும். மே 15க்குப் பின்னர் தோட்டத்தைச் சரிசெய்வோம். ஜூன் முதல் செப்டம்பர் வரை 4 மாதங்களுக்கு முட்டை கோஸ், வெண்டைக்காய், சுரைக்காய், பச்சை மிளகாய், கத்தரிக்காய், ப்ராக்கோலி, பச்சை மிளகு கொடி, குடைமிளகாய் உள்ளிட்ட காய்கறி வகைகளைப் பயிரிடுவோம்.

ஒவ்வொரு வருடமும், பலவித ரகங்களில் தக்காளியை உற்பத்தி செய்கிறோம். ஒரே நேரத்தில் 300 முதல் 500 தக்காளியாவது கிடைத்துவிடும். அதனை சுத்தம் செய்து நாங்கள் பாதுகாத்து வைத்துக் கொண்டு பயன்படுத்துவோம். அவரவர் வீடுகளுக்குத் தேவையானவற்றை அவரவர்களே உற்பத்தி செய்கின்றனர். ஆனால் மாங்காய், வாழை போன்றவை இந்த மண்ணில் வராது. அதனை மற்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்து பயன்படுத்துவோம்' என்கிறார் மீனாட்சிசுந்தரம் சுதர்சன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments