வீரப்பெண்மணி...
'புலியை முறத்தால் அடித்து விரட்டியவர்கள் அன்றைய தமிழ்ப் பெண்கள் என்றெல்லாம் படித்திருக்கிறோம்.
'புலியை முறத்தால் அடித்து விரட்டியவர்கள் அன்றைய தமிழ்ப் பெண்கள் என்றெல்லாம் படித்திருக்கிறோம். இதைப் போலவே அண்மையில் நடைபெற்ற ஒரு சம்பவம் கர்நாடகத்தில் பேசுபொருளாகியுள்ளது.
மைசூரு சித்தார்த்தா நகரில் வினயமார்காவில் ஓய்வு பெற்ற மாநகராட்சிப் பொறியாளர் சுரேஷின் வீட்டுக்குள் ஒருநாள் காலை நேரத்தில் சிறுத்தை ஒன்று புகுந்தது. அப்போது சுரேஷ் வீட்டில் இல்லை.
அவரது மனைவி சுஜாதாவும் இதை அறியவில்லை. பின்னர், வீட்டு வேலைக்காரி வந்தபோது, வயதான மாமியார் ஷைலஜாவின் படுக்கையின் மீது பேன் சுற்றிக் கொண்டிருக்க, காற்று படும்படி சிறுத்தை அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தது தெரியவந்தது.
Advertisement
சிறுத்தையால் மாமியாருக்கு பிரச்னை வரலாம் என சுஜாதாவுக்கு பயம் எழ, அந்த நிமிடமே அவரைக் காப்பாற்றியாக வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.
'என்ன செய்வது? என்று யோசித்த சுஜாதா, படுத்திருந்த மாமியாரை சத்தமில்லாமல் வேலைக்காரியின் உதவியுடன் அப்படியே தூக்கி அறையை விட்டு வெளியே வந்தார். அவரை மற்றொரு அறையில் படுக்க வைத்துவிட்டு, சிறுத்தை இருந்த கதவின் வெளிப்பூட்டை பூட்டினர்.
தகவலின்பேரில் வனத்துறையினர் விரைந்து வந்தனர். அவர்கள் கைப்பேசியை அறைக்குள் செலுத்தி புகைப்படம் எடுத்து, அங்கு சிறுத்தை இருப்பதை உறுதி செய்தனர். அதற்கு மயக்க மருந்து செலுத்திப் பிடித்தனர். இதனிடையே சுஜாதாவின் அசாத்திய துணிவும், அவர் மாமியார் ஷைலஜாவை தூக்கி வந்ததும் பரபரப்பான செய்தியானது.
இந்த நிகழ்வு குறித்து கர்நாடக அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் கூறுகையில், 'இந்தச் சம்பவம் மொத்த பெண் குலத்துக்கும் பெருமையான விஷயம். மாமியார் மருமகள் இடையேயான உறவு குறித்து சமுதாயத்தில் உள்ள தவறான எண்ணத்தை சுஜாதா துடைத்தெறிந்துள்ளார். கர்நாடக மாநிலத்துக்கு முன் மாதிரியாகத் திகழும் சுஜாதாவின் வீரத்தைப் பாராட்டி அவருக்கு 'கித்தூர் ராணி சென்னம்மா விருது வழங்கப்படும். தைரியமான பெண்களே இந்த நாட்டின் உண்மையான சக்தி என்று கூறினார்.