பகைவனும் நீயல்லவா?
"பகுத்தவற்றுள் நற்றிணைக்கோர் ஈடே இல்லை' என்பது தமிழ்ச் சான்றோர் புலியூர்க் கேசிகனின் மொழியாகும். அத்தகைய சிறப்புக்குரியது நற்றிணைப் பாடல்கள்.
"பகுத்தவற்றுள் நற்றிணைக்கோர் ஈடே இல்லை' என்பது தமிழ்ச் சான்றோர் புலியூர்க் கேசிகனின் மொழியாகும். அத்தகைய சிறப்புக்குரியது நற்றிணைப் பாடல்கள்.
பரத்தையரிடம் சென்று திரும்பிய "இருப்பை' எனும் ஊரைச் சேர்ந்த வீரன் ஒருவன் தன் தலைவியைக் கண்டு தழுவ வருகிறான். அவனோடு ஊடல் கொண்ட தலைவி அவனை ஏற்க மறுத்து, அவனது செயலை எருமையின் செயலோடு ஒப்பிட்டுப் பின்வருமாறு மொழிகிறாள்:
"வயலில் கழுநீர் மலரை மேய்ந்த கரிய கால்களை உடைய எருமை, தாமரையின் குளிர்ச்சி பொருந்திய மலரை உண்ணாது வெறுத்திருக்கும் அவ்வெருமை, தடிகொண்ட வீரரைப் போல் நடந்து அருகிலுள்ள குன்றுபோல் குவிந்த வெண்மணல் மேட்டில் படுத்துறங்கும். இத்தகைய எருமைகளை உடைய ஊரனே! (தாமரை போன்ற தலைவி இருக்க, இழிந்த கழுநீர்ப் பூப்போன்ற பரத்தையரை நாடிச் சென்று அங்கேயே விழுந்து கிடப்பவன்) நீ இப்போது என்னிடம் மிகுதியான அன்பு கொண்டவன்போல் நடித்து பலமுறை தழுவ வருகின்றாய். பகை மிகுதலால் வந்த பகை மன்னர்களை அழித்து வென்றவனும், சிவந்த வேலுடையவனுமாகிய "விராஅன்' என்பவனின் நிறைந்த புனல் வாயிலின் அருகமைந்த "இருப்பை' என்னும் நகரம் போன்று என்னுடைய அழகு விளங்கிற்று.
Advertisement
ஆனால் அந்நலம் கெட்டு, தளைத்துப் பலவாக விளங்கும் கூந்தலில் அழகுபெறச் சூட்டிய பூமாலையை வாடச் செய்த பகைவனும் நீயல்லவா? உன் செய்கையை நான் மறவேன்' (உன்னைப் பற்றி எனக்கு நன்றாகவே தெரியும்) என்று கூறி, தலைவனுடன் உடன்பட மறுக்கிறாள்.
புலவர் பரணர் பாடிய, மருதத் திணையில் அமைந்த நற்றிணை பாடல் ஒன்று இதைப் படம் பிடிக்கிறது.
கழுநீர் மேய்ந்த கருந்தாள் எருமை
பழனத் தாமரைப் பனிமலர் முணைஇத்,
தண்டு சேர் மள்ளரின் இயலி, அயலது
குன்று சேர்வெண் மணல் துஞ்சும் ஊர!
வெய்யை போல முயங்குதி; முனையெழத்
தெவ்வர்த் தேய்த்த செவ்வேல் வயவன்
மலிபுனல் வாயில் இருப்பை அன்னவென்
ஒலிபல் கூந்தல் நலம்பெறப் புனைந்த
முகை அவிழ் கோதை வாட்டிய
பகைவன்மன்? யான் மறந்து அமைகலனே!
(பா.260)