முகப்பு
வெள்ளிமணி

மாதொரு பாரனார்க்கு மகா கும்பாபிஷேகம்

நமது வேதங்களும், இதிகாசங்களும், புராணங்களும் சிவபெருமானுக்கு பல்வேறு திருநாமங்களை வழங்குகின்றன. அப்பர் பெருமான், தான் பாடி அருளியுள்ள தேவாரத்தில், ""பேராயிரம் பரவி வானோர் ஏத்தும் பெம்மானை'' என்று பாடி

Updated On : 27 டிசம்பர், 2023 at 4:03 PM
பகிர்:

நமது வேதங்களும், இதிகாசங்களும், புராணங்களும் சிவபெருமானுக்கு பல்வேறு திருநாமங்களை வழங்குகின்றன. அப்பர் பெருமான், தான் பாடி அருளியுள்ள தேவாரத்தில், ""பேராயிரம் பரவி வானோர் ஏத்தும் பெம்மானை'' என்று பாடி உவக்கின்றார்.

பரமேஸ்வரனுக்கு ஆயிரம் திருநாமங்கள் உண்டு என்பது அப்பர் வாக்கு. ஆயின் அருணகிரிநாதர், ""வெகு கோடி நாம சம்பு குமார'' என்று திருப்புகழில் பாடி, "பலகோடித் திருநாமங்களை உடையவர் சிவபெருமான்' என்று உளமுருகிக் கூறுகின்றார்.

அப்படிப்பட்ட பெயர்களில் "அர்த்தநாரி' என்னும் திருநாமம் சிவபெருமானுக்கே உரிய சிறப்புப் பெயராகும். "அர்த்த' என்ற சொல்லுக்கு "பாதி' என்று பொருள். "நாரி' என்பது தேவியைக் குறிக்கும். தனது உடலில் சரி பாதியை தன்னுடைய சக்தியான அம்பிகைக்கு வழங்கிய ஏக பரம்பொருளாக பரமேஸ்வரன் திகழ்வதையே "அர்த்தநாரி' என்னும் திருப்பெயர் குறிக்கின்றது.

"எந்த ஒரு தெய்வமாயினும் அதன் கருணைத் திறனே, அந்தத் தெய்வத்தின் தேவி வடிவாகத் திகழ்கிறது' என்கின்றனர் பெரியோர்கள். அவ்வகையில் தானும், தனது கருணையும் என்றும் பிரிவதில்லை என்பதை "அர்த்தநாரி' வடிவத்தின் மூலம் சிவபெருமான் உணர்த்துகின்றார். சைவத் திருமுறைகளில் பல்வேறு இடங்களில் "உமையொரு பாகனின்' புகழ் பாடப்படுகின்றது.

சென்னை - கும்மிடிப்பூண்டியை அடுத்துள்ள கவரப்பேட்டையிலிருந்து 12 கிலோ மீட்டர் பயணித்தால் "மாதர்பாக்கம்' என்னும் திருத்தலம் எதிர்படும். இது ஆதியில் "மாதொருபாகனூர்' என்று அழைக்கப்பட்டதாகவும், அதுவே மக்கள் வழக்கில் திரிந்து "மாதர்பாக்கம்' என்று ஆனதாகவும் கூறுகின்றனர். இவ்வூர் திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

திரேதாயுகத்தில் "மாதொரு பாகனார்' என்று அழைக்கப்பட்ட இந்த சிவபெருமானை, இஷ்வாகு வம்ச குல திலகனாகிய ராமபிரான் பூஜித்துள்ளார். அதன் பின்னர் இவ்வூர் சுவாமியின் பெயர் "ராமலிங்க ஈஸ்வரர்' என்றானது. அம்பிகையும் "பர்வத வர்த்தினி' என்றே அழைக்கப்படுகின்றாள்.

மார்க்கண்டேயர், அகஸ்தியர், புலஸ்தியர், வியாஸர் போன்ற எண்ணற்ற முனிவர்கள் சிவபெருமானை பூஜித்துள்ளனர். இவ்வரிசையில் ஸ்ரீ ராமபிரானும், கண்ண பரமாத்மாவும் யாருக்கும் சளைத்தவர்கள் அல்லர். நமது பாரத தேசத்தில் பல்வேறு இடங்களில் ராமபிரான் பூஜித்த சிவத் தலங்கள் உள்ளன. அதேபோல் கண்ணனும் பிருந்தாவனத்தில் உள்ள கோபேஸ்வர மகாதேவரை வழிபட்டதாகப் புராணங்கள் கூறும். உண்மையில் ஒரே பரமாத்மாவே சிவன், ராமன், கிருஷ்ணன் என்று வடிவங்கள் எடுக்கின்றன என்பதே நான்மறை கூறும் உண்மை. ஆயினும் மக்களை பக்தி நெறியில் செலுத்த சிவனை விஷ்ணுவும், விஷ்ணுவை சிவனும் பல்வேறு தலங்களில் பூஜித்து மக்களுக்கு வழிகாட்டியுள்ளனர்.

அப்படிப்பட்ட திருத்தலங்களில் ஒன்றுதான் "மாதர் பாக்கம்'. சிதிலமடைந்திருந்த இவ்வாலயத்தை சென்னை - வேளச்சேரியைச் சேர்ந்த திருக்கோயில் உழவாரப் பணி மன்றத்தின் அன்பர்கள் ஒன்றிணைந்து "புனருத்தாரணம்' செய்தனர். இன்று புதிய பொலிவோடு திகழ்கின்றது ராமலிங்கேஸ்வரர் ஆலயம். மேலும் சில திருப்பணிகள் நிறைவேற வேண்டியுள்ளன. அப்பணிகளில் பங்கேற்க விரும்பும் சிவநேயச் செல்வர்கள், "எஸ். முனுசாமி, கைப்பேசி  எண் : 99524 96676' என்பவரைத் தொடர்பு கொள்ளலாம்.

நாளது ஜூன் 3-ம் தேதியன்று காலை 10 மணியிலிருந்து 11 மணிக்குள் மாதர்பாக்கம் ராமலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. சிவனடியார்கள் இந்த வைபவத்தில் பங்கேற்று அரனருள் பெறுக.

மாதர்பாக்கத்திற்கு செங்குன்றம், கோயம்பேடு, பொன்னேரி ஆகிய இடங்களிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →