முகப்பு
வெள்ளிமணி

யோக நிலையில் காட்சி தரும் கமலாம்பிகை!

திருவாரூர் தேர் அழகு என்பது புகழ்பெற்ற வழக்கு. மிகப் பெரிய அழகிய தேரும், கோயிலும், குளமும் கொண்ட திருத்தலம் திருவாரூர்.

Updated On : 4 ஏப்ரல், 2013 at 3:15 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 4:36 PM

திருவாரூர் தேர் அழகு என்பது புகழ்பெற்ற வழக்கு. மிகப் பெரிய அழகிய தேரும், கோயிலும், குளமும் கொண்ட திருத்தலம் திருவாரூர். இங்கே நாகநாதரும் யோகாம்பிகையும் எழுந்தருளியுள்ளனர். திருமூலட்டானம், பூங்கோயில் என்னும் திருப்பெயர்களுடன் திகழும் இந்தத் தலத்தில் புகழ்பெற்று விளங்கும் திருக்குளம் கமலாலயம் எனப்படுகிறது. இதன் நடுவே தீவைப் போன்ற அழகான கோயிலும் உண்டு. இதனை நடுவநாயனார் கோயில் என்பர்.

பஞ்சபூதத் தலங்களுள் திருவாரூரை பிருத்வி தலமாகக் கொள்வர். சப்தவிடங்கத் தலங்களுள் ஒன்றாகத் திகழும் இக்கோயிலில் நீலோத்பலாம்பாள், கமலாம்பிகை என இரு தேவியர், தனித் தனி சந்நிதிகளில் கோயில் கொண்டுள்ளனர்.
இத்தலத்தில் எட்டு துர்க்கை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். முதல் பிராகாரத்திலுள்ள மகிஷாசுரமர்த்தினியே பிரதான துர்க்கை. மேலும் இரண்டு துர்க்கை சந்நிதி முதல் பிராகாரத்திலும், இரண்டாம் பிராகாரத்தில் நான்கு துர்க்கையரும், கமலாம்பாள் சந்நிதியில் ஒரு துர்க்கையரும் ஆக எட்டு துர்க்கை சந்நிதிகள் இங்கே சிறப்பம்சம். மேலும், நவக்கிரங்கள் ஒரே வரிசையில் இருப்பதும் தனி சிறப்புதான்.

அன்னை இரு வகை வடிவம் தாங்கி உலக உயிர்களுக்கெல்லாம் அருள் பாலிக்கிறாள். கோயிலின் இரண்டாவது பிராகாரத்தில் நீலோத்பலாம்பிகை திருக்கரத்தில் கருங்குவளை சுமந்து நிற்க அன்னையின் இடது கரம் முருகனின் சுண்டு விரலைப் பற்றிய வண்ணம் காணப்படுகிறது. இது வேறு எந்தத் தலங்களிலும் காணக் கிடைக்காத அற்புதமான திருக்காட்சி.

Advertisement

அறத்துடன் கூடிய இல்வாழ்க்கைக்கு வழிகாட்டி அருளும் அன்னையாக நீலோத்பலாம்பிகை திகழ்கிறாள். இந்த அன்னை இல்லற வாழ்வைச் சிறக்கச் செய்யும் வரங்கள் அனைத்தையும் அளிக்கிறாள். அன்னையை மனமுருக வேண்டுபவர்கள் வறுமை, பிணி நீங்கி இன்பம் பெறுகின்றனர். மழலைச் செல்வம் வேண்டுபவர்கள் அன்னையின் அருளால் கிடைக்கப் பெறுகின்றனர்.

இங்கே உள்ள மற்றோர் அம்பிகை யோக நிலையில் உள்ள கமலாம்பிகை. அம்பிகை தவக்கோலத்தில் காட்சி தருகிறார். சுத்த சித்தியினைப் பெற வேண்டுமானால் அன்னையை நாம் தியானிக்க வேண்டும். அலைபாயும் நம் மனதை ஒருமுகப்படுத்தி கமலாம்பிகையை தியானித்தால், மாசு அகலும். பிறவா நிலை கிட்டும். அறம், பொருள், இன்பம் என முப்பெரும் பேற்றையும் பெறலாம். இவ்வாறு இரு நிலைகளில் அம்பிகை அருள்புரியும் சக்தி பீடத்தலம் வேறு எங்கும் இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.