விருதுநகர் அருகே ஷீரடி பாபா!
ஷீரடி சாய்பாபா பல்வேறு இடங்களில் கோயில் கொண்டு வழிபடப்படுகிறார்.
ஷீரடி சாய்பாபா பல்வேறு இடங்களில் கோயில் கொண்டு வழிபடப்படுகிறார். அவ்வகையில், விருதுநகர்-சிவகாசி சாலையில் மீசலூர் விலக்கருகே ஆலயத்தில் அருளும் பாபா, தன்னை வழிபடும் பக்தர்களின் பிரச்னைகளைத் தீர்த்து மகிழ்ச்சியான வாழ்க்கையை அளிக்கிறார்.
விருதுநகர் அருகே உள்ள மீசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராகவ நாயுடு. இவர் ஒருமுறை மகாராஷ்டிராவில் உள்ள ஷீரடி சாய்பாபாவை தரிசித்தார். அதன் பிறகு அவருடைய தொழிலில் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கி, நிம்மதி ஏற்பட்டது. தான் பெற்ற இன்பம் இவ்வையம் பெற வேண்டும் என்று விரும்பிய ராகவ நாயுடு சாய்பாபாவுக்கு திருக்கோயில் எழுப்ப முடிவு செய்தார். அவரது கிராமத்திற்கு அருகில் உள்ள மீசலூர்விலக்கருகே 5 ஏக்கர் நிலத்தில் "ஷீரடி சாய்பாபா மந்திர்' என்னும் திருக்கோயிலை எழுப்பினார். அதற்காக ஜெய்பூரிலிருந்து ஷீரடி சாய்பாபாவின் சிலை வடிவமைக்கப்பட்டு இங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டது. கடந்த 2009ஆம் ஆண்டு கும்பாபிஷேகமும் நடைபெற்றது.
இக்கோயிலில் நாள்தோறும் நான்கு கால பூஜைகள் நடத்தப்படுகின்றன. குரு பூர்ணிமா பூஜை, விஜயதசமி ஆகியவை மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
ராம நவமி நாள் சாய்பாபா பிறந்த நாளாகக் கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் வருகிற ராமநவமி நாள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது. அதில் கலந்துகொண்டு சாய்பாபாவை வழிபட அனைத்து நலன்களும் உண்டாகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோயிலை தரிசிக்க வரும் பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக மண்டபம் அமைக்கும் திருப்பணி தற்போது நடந்துகொண்டிருக்கிறது.
Advertisement