51 சக்தி பீடம் : தேவ்கர் ஜெய துர்கா
ஜார்கண்ட் மாநிலம், தேவ்கர் மாவட்டத்தில் அமைந்துள்ளது ஜெயதுர்கா ஆலயம். 51 சக்தி பீடங்களில் 22-ஆவதாக விளங்கும் இது, அன்னையின் உடற்கூறுகளில் இதயம் விழுந்த தலமாகக் கருதப்படுகிறது.
ஜார்கண்ட் மாநிலம், தேவ்கர் மாவட்டத்தில் அமைந்துள்ளது ஜெயதுர்கா ஆலயம். 51 சக்தி பீடங்களில் 22-ஆவதாக விளங்கும் இது, அன்னையின் உடற்கூறுகளில் இதயம் விழுந்த தலமாகக் கருதப்படுகிறது.
தேவ்கர் மாவட்டத்தில் உள்ள இந்த சக்தி பீடத்தை அலங்கரிக்கும் அன்னை, ஜெயதுர்கா என்றும், கால பைரவர் வைத்யநாதர் என்றும் போற்றப்படுகிறார்கள். இந்தியாவிலேயே மகாசக்தி பீடமும் ஜோதிர்லிங்கமும் ஒரே இடத்தில் தரிசனம் தரும் மூன்று தலங்களில் வைத்யநாதர் ஆலயமும் ஒன்று. காசியும், ஸ்ரீ சைலமும் மற்ற இரண்டு தலங்கள். அன்னையின் மார்புப் பகுதி விழுந்த தலத்தை ஹ்ருதய்பீட் என்பர். தற்போது வைத்யநாதர் ஆலயம் என்று மக்களால் அழைக்கப்படுகிறது.
இருதய பீடமான இங்கே அன்னையின் சந்நிதி, உயர்ந்த சதுர மேடையின் மேல் கட்டப்பட்டுள்ளது. சிவன் சந்நிதிக்கு நேர் கிழக்கில் அன்னையின் ஆலயம் உள்ளது. கருவறையில் பிரதான தெய்வமாக ஜெயதுர்கா கம்பீரமாகக் காட்சியளிக்கிறாள்.
Advertisement
கயிலை மலையில் பல காலம் சிவபெருமானை அர்ச்சித்தும் பலன் கிடைக்கவில்லை ராவணனுக்கு. பின்னர் அவன் இமயத்தின் தென்புறத்தில் பெரிய குண்டம் உண்டாக்கி, தன் தலைகளை ஒவ்வொன்றாகக் கொய்து பெருமானை நினைந்து யாகம் செய்தான். பத்தாவது தலையை வெட்டி எடுக்கும்போது சிவபெருமான் ராவணன் முன் தோன்றி, குறையாத வலிமையையும், அறுபட்ட சிரங்களை மீண்டும் வளரும்படியும் அருளினார்.
கயிலை மலையை அப்படியே இடம் பெயர்த்து இலங்கையில் வைத்துவிட்டால், தினமும் சிவ வழிபாடு செய்ய வசதியாக இருக்கும் என்று எண்ணிய ராவணன், திருக்கயிலாயம் வந்தான். இந்த நேரம் பார்வதி-பரமேஸ்வரன், கணங்களோடு கொலுவீற்றிருந்தனர். ஈசனை தரிசிக்க தேவர்களும் அங்கே குழுமியிருந்தனர். மலையடிவாரம் அடைந்த ராவணன், தன் பலம் முழுவதையும் கொண்டு இருபது கரங்களால் மலையை ஒருமுறை அசைத்து அதைப் பெயர்த்துத் தன் தோளில் தூக்க முயன்றான். இதனால் கயிலயங்கிரி பெரும் ஆட்டம் கண்டது. பிரம்மா, விஷ்ணு உள்ளிட்ட தேவர்களும் நிலை தடுமாறினர். சிவகணங்கள் விழுந்து புரண்டனர்.
கலக்கமடைந்த மலைமகள், ஈசனைப் பார்த்து "இது என்ன விபரீதம்....ராவணனை அடக்குங்கள்'' என்றாள். சினம் கொண்ட சிவ பெருமான், தன் இடது காலின் கட்டை விரலால் மலைக்கு ஓர் அழுத்தம் கொடுத்தார். இதனால் மலையின் அடிபாகத்தில் நசுங்கி அவதியுற்றான் ராவணன். பின் வாகீச முனிவர் அங்கு வந்து, ராவணனிடம் "சாம வேதமாகிற கானத்தை பிழையின்றி ஓதி, சிவபெருமானை சாந்தப்படுத்தி, சாபவிமோசனம் அடைவாய்'' என்று வழி கூறினார். முனிவரின் வாக்குப்படியே கானம் இசைத்து சாப விமோசனம் அடைந்தான் ராவணன். இத்தகைய புராணக் கதைகளைக் கொண்டுள்ளது இந்தத் தலம்.