முகப்பு
வெள்ளிமணி

காவல் தெய்வம் முப்பந்தல் இசக்கியம்மன்!

முப்பந்தல் அருகே உள்ள பழவூரில் செல்வச் செழிப்பு மிக்க நாட்டியப் பெண்மணி ஒருத்தி தனது மகள் இசக்கியுடன் வாழ்ந்து வந்தாள்.

Updated On : 21 பிப்ரவரி, 2013 at 1:06 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 4:03 PM

முப்பந்தல் அருகே உள்ள பழவூரில் செல்வச் செழிப்பு மிக்க நாட்டியப் பெண்மணி ஒருத்தி தனது மகள் இசக்கியுடன் வாழ்ந்து வந்தாள். அவளது சொத்தின் மீது ஆசை கொண்ட ஒருவன், இசக்கியை காதல் மொழி பேசி வஞ்சனையால் வீழ்த்தினான். பின்னர் இசக்கியை வீட்டிலிருந்து நகை, பணத்தை எடுத்துக்கொண்டு அருகில் இருந்த காட்டுக்கு வருமாறு அழைத்தான். இசக்கியும் அப்படியே செய்தாள். அவள் அவன்பால் கட்டுண்டு இருந்த போது இசக்கியின் தலையில் பாறாங்கல்லை தூக்கிப் போட்டுக் கொன்றுவிட்டான்.

பின்னர் நகை பணத்துடன் காட்டு வழியே அவன் சென்றபோது பாம்பு ஒன்று அவனைத் தீண்டியது. அதனால், அவனும் இறந்து போனான். தெய்வப் பிறவியான இசக்கி, சிவபெருமான் முன் நின்றாள். தன்னை வஞ்சித்துக் கொன்றவனை தானே அழிக்க வேண்டும் என்றும், தன்னையும், தன்னை ஏமாற்றியவனையும் உயிர்த்தெழச் செய்யுமாறும் வரம் வேண்டினாள். சிவபெருமானும் வரமளித்தார்.

அதன்படி, இருவரும் உயிர் பெற்று எழுந்தனர். இசக்கியைக் கொன்றவன் ஏதுமறியாதவன் போல் எழுந்து வீடு திரும்பினான். இசக்கியோ காட்டில் அலைந்து திரிந்தாள். ஒருநாள், காட்டில் இருந்த கள்ளிச் செடியை ஒடித்து அதனை அழகிய குழந்தை ஆக்கினாள். அந்தக் குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டு, அவன் ஊருக்குச் சென்று பஞ்சாயத்தைக் கூட்டினாள். தன்னையும் குழந்தையையும் அவன் ஏற்க மறுப்பதாக புகார் கூறினாள். விசாரணையின் போது அவனோ, "இசக்கி தனது மனைவியல்ல, இது என் குழந்தையும் அல்ல' என்று அடம்பிடித்தான். ஆனால், இடுப்பில் இருந்த குழந்தை அவனிடம் சென்று அப்பா என்றது. இதனைப் பார்த்த ஊர் தலைவர் "குழந்தை பொய் சொல்லாது, எனவே நீ உன் மனைவியுடன் பேசி ஒரு முடிவுக்கு வா' என்று ஒரே வீட்டில் இருவரையும் உள்ளே வைத்துப் பூட்டிச் சென்றனர்.  இதற்காகக் காத்திருந்த இசக்கி, நள்ளிரவு ஆனதும் விஸ்வரூபம் எடுத்து தன்னை ஏமாற்றிக் கொன்றவனை, தன் கையால் கொன்று பழிதீர்த்தாள்.

Advertisement

அதன் பிறகு அந்த ஊரை விட்டு, மேற்கு நோக்கி நடந்தாள். அந்த நேரத்தில், ஆக்ரோஷத்துடன் சென்றவளைப் பார்த்து கலக்கமுற்றார் ஒவ்வையார். இசக்கியை சாந்தப்படுத்திய ஒவ்வையார், "அம்மா... இனி நீ இருக்க வேண்டிய இடம் இதுதான்' என்றார். ஒவ்வையாரின் சொல்லுக்கு இணங்க இசக்கியும் அங்கேயே தங்கினாள். இதனைப் பார்த்துக் கொண்டிருந்த சிவபெருமான் பார்வதி தேவியிடம் அவளுக்கு அருளுமாறு கூற, பார்வதி தேவியும் தன் வீரசக்தியை இசக்கிக்கு அளித்தாள். அன்று முதல் ஊரைக் காக்கும் தெய்வமானாள் இசக்கி.முப்பந்தல் கிராமத்தில் கோயில் கொண்டதால் முப்பந்தல் இசக்கி அம்மன் என்று பெயர் பெற்றாள். நெல்லை-நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் ஆரல்வாய்மொழிக்கும், காவல்கிணறுக்கும் இடையே உள்ளது இந்தக் கோயில்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.