முகப்பு
வெள்ளிமணி

பச்சையம்மன் செய்த சிவபூஜை!

சனின் இடப் பாகம் பெற்று சிவசக்தி ஸ்வரூபத்தை உலகுக்கு நிலைநாட்டிட எண்ணம் கொண்டவராய் பார்வதி தேவி காஞ்சியில் தவமிருந்தார்.

Updated On : 1 மார்ச், 2013 at 12:39 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 4:08 PM

ஈசனின் இடப் பாகம் பெற்று சிவசக்தி ஸ்வரூபத்தை உலகுக்கு நிலைநாட்டிட எண்ணம் கொண்டவராய் பார்வதி தேவி காஞ்சியில் தவமிருந்தார். பின்னர் அங்கிருந்து சிவபெருமான் உறையும் திருவண்ணாமலை நோக்கிச் செல்ல முடிவு செய்தார். அவ்வாறே திருவண்ணாமலை நோக்கிச் சென்ற போது, ஓர் இடத்தில் வாழைப்பந்தல் அமைத்தார். அங்கே மணலில் லிங்கம் அமைத்து வழிபட எண்ணினார். அதற்கு தண்ணீர் தேவைப்பட்டது. சுற்றுமுற்றும் தேடினார். நீர் அகப்படவில்லை. உடனே தம் பிள்ளைகளான கணபதியையும் முருகனையும் அழைத்து தண்ணீர் கொண்டு வருமாறு கூறினார். அவர்களும் நீரைத் தேடிச் சென்றனர். அவர்கள் சென்று வெகுநேரம் ஆகிவிடவே, தம் சக்தியால் கையில் இருந்த பிரம்பு கொண்டு பூமியைத் தட்டி ஓர் ஊற்றைத் தோற்றுவித்தார்.

ஊற்றில் இருந்து நீர் பொங்கி வந்தது. அதனைக் கொண்டு மண்ணால் லிங்கம் அமைத்து வழிபடத் தொடங்கினார். அதன் பின்னரே கணேசரும் முருகரும் ஆளுக்கொரு பக்கத்தில் இருந்து நீர் கொண்டு வந்தனர். இவ்வாறு மூன்று நீரும் மூன்று நதிகள் ஆயின. அம்மூன்று நதிகளும் கூடிய இடம், முக்கூட்டு எனப்பட்டது.

இவ்வாறு அன்னை சிவபூஜை செய்து வந்த வேளையில், அங்கிருந்த அரக்கன் ஒருவன் பூஜைக்கு இடையூறு செய்து வந்தான். இதையறிந்த சிவபெருமானும் திருமாலும் வாமுனி-செம்முனியாகத் தோன்றி, அரக்கனை அழித்தனர். பின்னர் தேவி பார்வதி இடையூறு ஏதும் இன்றி சிவபூஜை முடித்து திருவண்ணாமலை சென்றார். வாழைப்பந்தல் அமைத்து சிவபூஜை செய்த அன்னையே பச்சையம்மன் ஆனார்.

Advertisement

பார்வதி மணல் லிங்கம் பிடித்த இடத்தில் தற்போது 4 அடி உயர கல்லால் ஆன லிங்கத் திருமேனி உள்ளது. கோயிலில் சண்ட-முண்டர்கள் நுழைவாயிலில் உள்ளனர். வெளியே சுதை வடிவில் வாமுனி-செம்முனி ஆகியோர் உள்ளனர். இங்கே சிவபெருமான் மன்னார் சாமியாக அம்மன் சந்நிதிக்கு வெளியே சந்நிதி கொண்டுள்ளார். துவார பாலகர்கள் சிவ- விஷ்ணு வடிவமாகத் திகழ்கின்றனர். கருவறையில் அன்னை பச்சை நிறத் திருமேனியுடன் சுதை வடிவில் காட்சி தருகிறார். இங்கே பச்சை நிற குங்கும பிரசாதம் தரப்படுகிறது. இங்கே ஆடி திங்கட்கிழமைகளில் சோமவார விழா சிறப்பானவை.

வாழைப்பந்தல் எனும் இந்தத் தலம், ஆரணியிலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.