முகப்பு
வெள்ளிமணி

அதிர்ஷ்டங்கள் தொடரும்!

உத்யோகத்தில் பெரிய பதவியை அடைய வாய்ப்பு உள்ளதா?

Updated On : 3 ஜனவரி, 2013 at 12:03 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:23 PM

நான் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். சொந்தமாக வியாபாரம் செய்ய முயற்சிக்கிறேன். மருந்து சம்பந்தப்பட்ட ஏஜென்ஸி பற்றி எனக்கு ஓரளவு தெரியும். ஜோதிடமும் அஞ்சல் வழியில் கற்று வருகிறேன். அதில் வளர்ச்சி அடைவேனா? அல்லது தற்சமயம் பார்த்து வரும் உத்யோகத்தில் பெரிய பதவியை அடைய வாய்ப்பு உள்ளதா? நான் வணங்க வேண்டிய தெய்வம் எது? எந்தக் கல் பதித்த மோதிரம் அணியலாம்? எனக்கு செவ்வாய் உச்சம் பெற்று இருந்தாலும் அவரின் தசையில் இன்னும் நான் அதிர்ஷ்ட வாய்ப்புகளைப் பெற இயலவில்லை. செவ்வாய், ராகு பகவானுடன் இணைந்திருப்பதால்தான் வாய்ப்புகள் கிடைக்கவில்லையா?
 கிருஷ்ணன், நாகப்பட்டிணம்.
 
 உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் பகவான் பூர்வ புண்யம் மற்றும் தொழில் ஸ்தானத்திற்கு அதிபதியாகி தன் சுயசாரத்தில் உச்சம் பெற்றிருக்கிறார். அதாவது 28ஆம் பாகையில் அமர்ந்து இருக்கிறார். இதற்கு பரமோச்சம் அதாவது பரம உச்சம், உச்சத்தில் முழு பலம் பெற்று இருப்பது என்று பொருள். செவ்வாய் பகவான் மகர ராசியில் 28ஆம் பாகையில் பரம உச்சம் பெறுவதுபோல், சூரிய பகவான் மேஷ ராசியில் 10ஆம் பாகையிலும், சந்திர பகவான் ரிஷப ராசியில் 3ஆம் பாகையிலும், புதன் பகவான் கன்னி ராசியில் 15ஆம் பாகையிலும், குரு பகவான் கடக ராசியில் 5ஆம் பாகையிலும், சுக்கிர பகவான் மீனராசியில் 27ஆம் பாகையிலும், சனி பகவான் துலாம் ராசியில் 20ஆம் பாகையிலும் பரமோச்சம் அடைகிறார்கள்.
 உங்களுக்கு செவ்வாய் பகவான் தொழில் ஸ்தானாதிபதியாகி பரமோச்சத்தில் உள்ளதால் உத்யோகத்தில் சிறப்பான பதவிகளை எட்டிப்பிடித்து விடுவீர்கள். உங்களுக்கு செவ்வாய் பகவான் ஒரு திரிகோண ராசிக்கும் (ஐந்தாம் வீடு) ஒரு கேந்திரத்திர ராசிக்கும் (10ஆம் வீடு) அதிபதியாகி யோககாரகர் என்கிற அந்தஸ்தைப் பெறுகிறார். அதுவும் தற்சமயம் உங்களுக்கு செவ்வாய் பகவானின் தசை நடக்கத் தொடங்கியுள்ளது. செவ்வாய் தசையில் ஒருவருடம்தான் முடிந்து இருக்கிறது. இன்னும் 3 ஆண்டுகள் முடிந்தவுடன் தசையின் பின்பகுதியில் சிறப்பான பதவிகள் ஏன் வெளிநாட்டிற்குச் செல்லும் வாய்ப்புகளும் தேடி வரும். உங்கள் மனதில் உள்ள ஆசைகள் பூர்த்தியாகும். செவ்வாய் பகவான் ராகு பகவானுடன் இணைந்திருப்பதால் செவ்வாய் பகவானின் பலம் குறைந்து விடாது. ராகு பகவான் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம் ஆகிய ஐந்து ராசிகளில் சஞ்சரித்தால் குறிப்பாக நலம் செய்வார் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் ராகு பகவான் (அ) கேது பகவான் ஆட்சி உச்சம் பெற்ற கிரகத்துடன் இணைந்து இருந்தாலோ யோக காரகர்களுடன் இணைந்திருந்தாலோ அதற்கு அஷ்டமஹா நாக யோகம் என்று பெயர். உங்களுக்கு உச்சம் பெற்ற செவ்வாய் பகவானுடன் ராகு பகவான் மகர ராசியில் இணைந்து இருப்பதால் அஷ்ட மஹாநாகயோகம் உண்டாகிறது. அதனால் அதிர்ஷ்ட வாய்ப்புகள் ராகு பகவானின் தசையிலும் தொடரும். மேலும் செவ்வாய் பகவான் சப்தமஸ்தானத்தில் (ஏழாம் வீடு) உச்சம் பெற்று இருப்பதால் பஞ்ச மஹா புருஷ யோகங்களில் ஒன்றான ருசக யோகமும் உண்டாகிறது. இந்த யோகத்தினால் ஒருவர் தன் செயல்களில் பிடிவாத குணத்துடன் முயன்று முன்னேறும் தன்மை அமைந்திருக்கும். நேர்முக, மறைமுக எதிரிகளை வெல்லும் ஆற்றல் உண்டாகும். அசையும், அசையாச் சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாகும். தொழிலிலும் வாழ்விலும் பல வெற்றிகளை அடையலாம்.
 ஆகவே உங்கள் ஜாதகத்தில் இத்தகைய பலம் பொருந்திய கிரகங்கள் உள்ளதால் ஒன்றுக்கும் மேற்பட்ட தொழில்களில் வெற்றியடைவீர்கள். உங்களுக்கு மருந்துத் துறையும், ஜோதிடமும் ஏற்றது. பகுதி நேரமாக இந்தத் துறைகளில் ஈடுபடலாம். ஜோதிட ஆராய்ச்சியும் செய்யலாம். நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம் முருகப் பெருமான். செவ்வாய் கிழமைகளில் ஒருபொழுது விரதமிருந்து வழிபட்டு வரவும். பவழம், ரத்தினத்தை தங்கத்தில் பதித்து அணியலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.