அன்னை ஓர் அதிசயம்!
அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை, அவள் அடிதொழ மறப்பவர் மனிதரில்லை என்று ஒரு தமிழ்ப்பாடல் உண்டு.
அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை, அவள் அடிதொழ மறப்பவர் மனிதரில்லை என்று ஒரு தமிழ்ப்பாடல் உண்டு.
கிறிஸ்தவ மக்களின் பக்திக்கும் வணக்கத்திற்கும் மரியாதைக்கும் போற்றுதலுக்கும் உரியவராகத் திகழ்பவர் இயேசுகிறிஸ்துவின் அன்னை மரியாள்.
இயேசுவைப் போலவே இவரும் சக மனிதர்களின் விடுதலைக்காக மெüனமாய்ப் போராடி, இயேசுவின் போராட்டத்தில் பங்கு கொண்டு, இறுதியில் மக்களுக்காகத் தனது உயிருக்குயிரான மகனையே தந்த தியாகி.
ஏழை, எளிய மக்களின் கண்ணீர் துடைப்பதற்காகக் காலமெல்லாம் இயேசுவிடம் பரிந்து பேசி, வாழ்நாள் முழுவதும் பிறருக்காவே வாழ்ந்தவர் அன்னை மரியாள். விண்ணுலகம் சென்ற பிறகும் அதே மக்களின் எண்ணற்ற கோரிக்கைகளைத் தனது ஜெபத்தால் நிறைவேற்றித் தந்து கொண்டிருக்கிறார்.
சுயநலமும் போட்டியும் பொறாமையும் அகங்காரமும் ஆணவமும் தலைவிரித்தாடும் இந்த பூமியில் பெண்ணாகப் பிறந்து புனிதையாக வாழ்ந்தவர் அன்னை மரியாள். சாதாரண மனிதப் பெண்ணாகப் பிறந்தாலும் இறைவனின் அன்பு வாக்கினால் அதிசயப் பிறவியாக, பிறருக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் மரியாள்.
மாசற்ற குழந்தையாகப் பிறந்து, இளம்பெண்ணாக வளர்ந்த போது இறைவனின் கட்டளையை ஏற்று, தனது ஒரே மகனை மனித குலத்துக்காக அர்ப்பணித்தார்.
தனது இன்னுயிர் போகும் நிலையில் இயேசு கொடுத்த வாக்குறுதிக்காக உலக மக்களுக்குத் தாயாக இருந்து வருபவர்.
"உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்திற்கும் அவள் வித்திற்கும் இடையே பகையை உண்டாக்குவோம். அவள் உன் தலையை நசுக்குவாள்' (தொ.நூல் 3:15), என்று இறைவன் சொன்னபோதே, மரியாளை ஆண்டவர் முன்குறித்து வைத்திருந்தார் என்பது தெளிவாகிறது.
"அருள் மிகப் பெற்றவரே...' (லூக். 1:42) என்ற எலிசபெத்தின் வாழ்த்துரை மரியாளின் பாவமற்ற புனிதத்தன்மைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு.
இறைவன், மரியாளை கருவிலேயே புனிதப்படுத்தி, தனது மகன் இயேசுவின் வழியாக இந்த உலகுக்குத் தரவிருந்த மீட்புப் போராட்டத்திற்கும் தயார்படுத்தினார் என்பது மறுக்கமுடியாத உண்மை.
"இன்னாள் முதலாக எல்லாத் தலைமுறைகளும் என்னைப் பேறுடையாள் எனப் போற்றுமே' என்று மரியாள் தன்னைப் பிரகடனப்படுத்தினார்.
எனவே நாமும் அன்னையைப் போல பாவமற்ற வாழ்க்கை வாழ முயற்சித்து எல்லா நலன்களும் பெற்று வாழ்வோம்!