தூத்துக்குடி மாவட்டம் உள்ளது எஸ். கைலாசபுரம். ஒரு காலத்தில் வரலாற்றுச் சிறப்பு மிகுந்த ஊராக திகழ்ந்திருக்கின்றது. இங்கு பெருமாள் மேடு என்று அழைக்கப்படும் பகுதியில் சிவாலயமும், பெருமாள் கோயிலும் இருந்ததற்கானச் சான்றுகள் காணப்படுகின்றன. இங்கு கிடைத்த சிவலிங்கத்தின் பான பகுதியும், சிதைந்த நிலையில் கருடாழ்வார் சிலையும், தவழும் கிருஷ்ணனின் சுடுமண் பொம்மையும் (தலைப்பகுதி மட்டும்) இவ்வாலயத்தின் தொன்மையை புலப்படுத்துகின்றன.
வேத பிரசன்னத்தில் வந்த தல வரலாற்றின்படி, ரதி தேவியைப் பிரிந்த மன்மதன் இத்தல ஈசனை பூஜித்து மனைவியுடன் சேர்ந்த தலம். திருமால் பூஜித்த பெருமையுடையது. ஒரே நேர்கோட்டில் கிழக்கு நோக்கி சிவா-விஷ்ணு ஆலயங்கள் அமைந்த பதி. மன அமைதியின்மை, திருமணத்தடை, தம்பதியர் ஒற்றுமைக்கு தலைசிறந்த பரிகாரத்தலமாக இருந்திருக்கிறது.
இந்த தலத்தின் சிறப்பை அறிந்த இவ்வூர் கிராம மக்கள் மற்றும் அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர்கள், அருள்மிகு கைலாசநாதர் புனர் அமைப்பு அறக்கட்டளை என்ற அமைப்பை முறைப்படி பதிவு செய்து துவக்கி கடந்த ஆகஸ்ட்- இல் பாலாலய பூஜை செய்தனர். அதே இடத்தில் பழைமை மாறாமல் ஸ்ரீ கௌரி அம்மன் சமேத ஸ்ரீகைலாசநாதர் என்ற பெயரில், சிவனாலயத்திற்கும், ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ அனந்த வாசுதேவன் (சயன கோலப்பொருள்) என்ற பெயரில் பெருமாள் ஆலயமும் அமைய விருக்கின்றது.
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி அருளாசியுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த மாபெரும் புனரமைப்பு திருப்பணியில் பக்தர்கள் கலந்துகொண்டு இறையருள் பெறலாம். தூத்துக்குடியிலிருந்து 24 கி.மீ. தூரத்தில் மணியாச்சி செல்லும் வழியில் உள்ளது இத்தலம்.
தொடர்புக்கு: 99946 06360 / 95008 05023.
- கே.கண்ணன்