விநாயகப் பெருமானின் குறும்புச் செயல்
தெள்ளாற்றெறிந்த மூன்றாம் நந்திவர்மன் மீது பாடப்பட்ட நூலே “நந்திக்கலம்பகம்’.
தெள்ளாற்றெறிந்த மூன்றாம் நந்திவர்மன் மீது பாடப்பட்ட நூலே “நந்திக்கலம்பகம்’. சொற்சுவையும் பொருட்சுவையும் நிறைந்த இந்நூலில் இடம் பெற்றுள்ள கடவுள் வாழ்த்தில் வேழமுகம் கொண்ட ஸ்ரீவிநாயகப் பெருமானின் குறும்பை நூலாசிரியர் இப்படி படம் பிடித்துக் காட்டுகின்றார்.
அதாவது மூன்று உலகங்கள் யாவையும் பெற்ற உமையம்மையாரும் விரைந்து செல்கின்ற எருதை ஊர்தியாகக் கொண்ட சிவபெருமானும் அருகருகே அமர்ந்திருக்க இவர்களுக்கு நடுவே அமர்ந்துள்ள ஸ்ரீவிநாயகப்பெருமான் அம்பிகையைப் பார்த்து அம்மையே எனக்கு கன்னத்தில் ஒரு முத்தம் கொடு என்கிறார். சிவபெருமானும் மகிழ்ந்து தானும் ஒரு முத்தம் கொடுக்க நெருங்குகின்றார். அப்போது அம்மையும் முத்தம் கொடுக்க நெருங்கி வருகின்றாள். இந்நிலையில் திடீரென்று விநாயகப்பெருமான் பின்னே சிறிது நகர்ந்து கொள்ள அம்மையும், அப்பனும் ஒருவர்க்கொருவர் முத்தம் கொடுத்துக் கொள்ளும் ஆனந்தக்காட்சியைக் கண்டு விநாயகப்பெருமான் குறும்புப் புன்னகைப் பூக்கின்றார்.
இப்பேர்ப்பட்ட ஸ்ரீவிநாயகப் பெருமானின் சிவந்த தாமரை மலர் போன்ற திருவடிகளை எமது தலையின்மேல் அணிந்து கொள்கின்றேன் என்கிறார் இப்புலவர். இதற்கான பாடல்:
Advertisement
மும்மைப் புவனம் முழுதீன்ற
முதல்வியோடும் விடைப் பாகன்
அம்மை தருக முத்தமென
அழைப்ப ஆங்கே சிறிதகன்று
தம்மின் முத்தம் கொளநோக்கிச்
சற்றே நகைக்கும் வேழமுகன்
செம்மை முளரி மலர்த்தாள்எம்
சென்னி மிசையிற் புனைவாமே’.