முகப்பு
வெள்ளிமணி

மந்திர ரூபன் மகா நரசிம்மன்

பக்தர்களால் ஒரு கோடி எண்ணிக்கையில் எழுதப்படும் "ஸ்ரீந்ருஸிம்ஹ' என்கிற நாமம் (மந்திரம்) அடங்கிய நோட்டு புத்தகங்களே பீடமாக சமர்ப்பிக்கப்பட்டு அதனையே சிம்மாசனமாகக் கொண்டு பிரதிஷ்டையாகவுள்ளார் ஸ்ரீலட்சுமி

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:47 PM
பகிர்:

பக்தர்களால் ஒரு கோடி எண்ணிக்கையில் எழுதப்படும் "ஸ்ரீந்ருஸிம்ஹ' என்கிற நாமம் (மந்திரம்) அடங்கிய நோட்டு புத்தகங்களே பீடமாக சமர்ப்பிக்கப்பட்டு அதனையே சிம்மாசனமாகக் கொண்டு பிரதிஷ்டையாகவுள்ளார் ஸ்ரீலட்சுமி நரசிம்மர்.

வந்தவாசி வட்டத்தில் தென்னாங்கூர் அருகே உள்ளது சௌந்தர்யபுரம் கிராமம். பெயருக்கேற்றாற்போல் எங்கும் பசுமையான சூழலுடன் திகழ்கிறது. ஒரு காலத்தில் ஆன்மிகப் பெரியோர்கள் அதிக அளவில் வசித்த ஊர். இவ்வூரின்கண் உள்ளது ஸ்ரீஆதிகேசவப்பெருமாள் கோயில். ஒரு வைணவ ஆலயத்திற்குத் தேவையான அனைத்து சந்நிதிகளுடன் அமையப் பெற்ற ஆலயம். குறிப்பாக இவ்வாலயத்தில் மகாலட்சுமி தாயாரின் அம்சமாக ‘ஸ்ரீ பத்மசக்ரம்' பிரதிஷ்டையாகி உள்ளது. இது உலகில் வேறு எங்கும் காண முடியாத ஒன்றாகும். இந்த பத்ம சக்ரத்தில் அஷ்ட லட்சுமிகளும் வீற்றிருந்து, சேவிப்பர்களுக்கு அஷ்ட ஐஸ்வர்யங்களையும் அருள்கின்றனர். நம்பிக்கையுடன் இன்றளவும் சேவார்த்திகள் இங்கு வந்து தரிசிக்கிறார்கள்.

பெருமைகள் மிக்க இந்த ஆலயத்திற்கு மேலும் சாந்நித்யம் உண்டாக்கும் விதமாத ஸ்ரீ லட்சுமி நரசிம்மன் இவ்வாலய வளாகத்தில் சந்நிதி கொள்ளவிருக்கின்றார். நமது கர்மாவினால் உண்டான எல்லாவித கடன்களையும் (ருணம்) தீர்க்க "ருண விமோசன ஸ்ரீலக்ஷ்மி ந்ருஸிம்ஹானாக' வீற்றிருந்து அருளப்போவதாக ஒரு பக்தையின் கனவில் எம்பெருமான் தோன்றி வாக்களித்துள்ளார். அவ்வகையில் எம்பெருமானே விரும்பி சௌந்தர்யபுரத்தில் கோயில் கொள்ள இருக்கின்றார் எனலாம். மேலும் வெகுகாலம் முன்பு இவ்வூரில் ஸ்ரீ லட்சுமி நரஸிம்மன் சந்நிதி இருந்ததாக கர்ணபரம்பரைத் தகவல் உண்டு.

சுமார் 4  அடி உயரத்தில் ஆதிசேஷன் கீழ் மேலிருகரங்களில் சங்கு, சக்கரத்துடனும், கீழ் இரு கரங்களில் வலது கரம் அபய முத்திரையுடனும், இடது கரம் தனது இடது தொடையில் அமர்ந்துள்ள பிராட்டியை அணைத்தவாறு இருக்க சாந்தரூபியாய், தனது பக்தர்கள் குறையை நாளை என்று சொல்லாமல் அன்றே தீர்த்து அருளும் விதமாக காட்சி தரும் அற்புதத் தோற்றம். பிரதிஷ்டைக்குப் பின் பிரதோஷ பூஜைகளும், சுவாதி நட்சத்திர வழிபாடு, ஹோமங்களும் நடைபெற உள்ளது.

இதைக் கண்ணுறும் பக்தர்கள் கோடி நாம ஜபத்தில் பங்கேற்று தங்களால் முடிந்த அளவு "ஸ்ரீந்ருஸிம்ஹ' என்ற நாமத்தை எழுதி அனுப்பலாம். அத்துடன் இந்தச் சந்நிதி சிறப்புற அமைவதற்கான திருப்பணி கைங்கர்யத்திலும் ஈடுபடலாம். மேலும் தகவல்களுக்கு: 9894191094 / 9751556305.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.