முகப்பு
வெள்ளிமணி

கஞ்சத்தனம் பேராசையின் அடையாளம்!

அல்லாஹ் குர்ஆனில், கஞ்சத்தனம் செய்வதுடன், பிற மனிதர்களையும் கஞ்சத்தனம் செய்யும்படி தூண்டி, மேலும் அல்லாஹ் தன் அருட்கொடையிலிருந்து அவர்களுக்குக் கொடுத்ததை மறைத்துக் கொள்கிறார்கள்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:50 PM
பகிர்:

அல்லாஹ் குர்ஆனில், கஞ்சத்தனம் செய்வதுடன், பிற மனிதர்களையும் கஞ்சத்தனம் செய்யும்படி தூண்டி, மேலும் அல்லாஹ் தன் அருட்கொடையிலிருந்து அவர்களுக்குக் கொடுத்ததை மறைத்துக் கொள்கிறார்கள்.  அத்தகைய நன்றி கெட்டவர்களுக்கு இழிவான தண்டனையை நாம் சித்தப்படுத்தியுள்ளோம்.


கஞ்சத்தனம் உலகப் பேராசையின் அடையாளமாகும்.  அல்லாஹ்வின் கஜானா விசாலமானது.  அதில் குறைவு ஏற்பட்டுவிடாது.  அல்லாஹ் அடியானின் கஞ்சத்தனத்தையும், கோழைத்தனத்தையும் வெறுக்கிறான்.  தம் குடும்பத்தினருக்கு தாராளமாக அனுமதியளிக்கப்பட்ட செலவு செய்பவர்களின் பொருளில் அல்லாஹ் அபிவிருத்தி செய்கிறான்.
நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: கஞ்சத்தனத்தைப் பற்றி நான் உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கிறேன்.  ஏனெனில் உங்களுக்கு முன் வாழ்ந்த ஒரு சமூகம் கஞ்சத்தனத்தால் அழிந்துவிட்டது.   பேராசை அவர்களை உலோபியாகுமாறு ஏவியது.  அவர்களும் உலோபியாகிவிட்டார்கள்.  பாவம் செய்யுமாறு ஏவியது, அவர்களும் பாவம் செய்து விட்டார்கள்.
ஏழை எளிய மக்களுக்கும், மஸ்ஜித், மதரஸô என்ற இறைப்பணிகளுக்கும், இன்னும்  வழிப்போக்கர்கள், அறிந்தவர்கள், அறியாதவர்களுக்கும் உணவால், ஆடையால், செல்வத்தால் தாராளமாகக் கொடுப்பதினால் இறை நம்பிக்கை அதிகப்படுவதுடன், நன்மைகளும் கிடைத்துவிடும்.
நபி யஹ்யா (அலை) அவர்கள் ஒரு முறை ஷைத்தானிடம், "உனக்கு எல்லோரைக் காட்டிலும் அதிக விருப்பமுள்ள மனிதன் யார்?' எனக் கேட்டார்கள்.
அதற்கு ஷைத்தான், "எனக்கு அனைவரையும் விட அதிக விருப்பம், முஸ்லிமான கஞ்சனின் மீது இருக்கிறது.  மேலும், எல்லோரையும் விட அதிக வெறுப்பு, தர்மம் செய்பவனின் மீது இருக்கிறது' என பதிலளித்தான்.
நபி யஹ்யா (அலை) அவர்கள் அதற்கான காரணம் வினவ, ஷைத்தான், "கஞ்சனோ தனது உலோபித்தனத்தின் காரணமாக என்னை கவலை இல்லாமல் ஆக்கி வைத்துள்ளான்'.  அதாவது அவனுடைய உலோபித்தனமே அவனை நரகத்திற்கு இழுத்துச் செல்ல போதுமானது.
கருமித்தனம் உள்ளவர், உபகாரம் செய்தபின் சொல்லிக் காட்டுபவர் ஆகியோர் சுவனம் செல்லமாட்டார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
பேராசையுடையவனின் செல்வமும், கஞ்சத்தனம் உடையவனின் செல்வமும் அவனுக்கே பலன் தராது.  மாற்றமாக, தன் அவசியத் தேவையைப் பூர்த்தி செய்வதோடு, ஏழை எளிய தேவையுடைய மக்களுக்கு உதவிகள் செய்வது கொண்டே ஆத்மின சுகம் பெறமுடியும்.  
பசித்தோருக்கு உணவளிப்பதும், ஆடை இல்லாதோர்க்கு ஆடையளிப்பதும், துன்புற்றோரின் துயரத்தை நீக்குவதும் என்றென்றும் நிலைத்து நிற்கும். நன்மைகளில் உள்ளவையாகவும், நம் ஆத்மா ஈருலகிலும் சுகம் பெறுபவதற்கு காரணமாகவும் இருக்கும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.