முகப்பு
வெள்ளிமணி

விரதம் இருக்கும் அம்மன்

அம்மன் வழிபாட்டுக்குரிய சிறப்புமிக்கக் கோயில்களுள் ஒன்று, தேனி மாவட்டத்திலுள்ள வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில்.

Updated On : 24 ஏப்ரல், 2026 at 3:05 PM
வீரபாண்டி கௌமாரியம்மன்
பகிர்:

அம்மன் வழிபாட்டுக்குரிய சிறப்புமிக்கக் கோயில்களுள் ஒன்று, தேனி மாவட்டத்திலுள்ள வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில். அதனருகே முல்லை ஆற்றின் வலதுபுறம் திருக்கண்ணீஸ்வரர் கோயிலும் அமைந்துள்ளது.

ஒருசமயம், ஊழ்வினையால் தன் இரு கண்களிலும் பார்வையிழந்து வீரபாண்டிய மன்னன் அவதியுற்றான். அப்போது ஒருநாள் அவரது கனவில் தோன்றிய இறைவன் கூறியபடி, வீரபாண்டிய மன்னன் இத்தலத்தில் எழுந்தருளியுள்ள கெüமாரியை வணங்கி ஒரு கண்ணும், ஈசனை வணங்கி மற்றொரு கண்ணும் பெற்றான். இந்த மன்னரின் பெயரால் இந்தத் தலம் வீரபாண்டி என்ற பெயர் பெற்றது.

கண்பார்வை கிடைக்கப் பெற்ற மன்னன், ஈஸ்வரனுக்கு கண்ணீஸ்வரர் என்ற பெயரிட்டு கற்கோயில் அமைத்தார். இருவரையும் வேண்ட தீராத நோய் தீர்கிறது, பார்வை குறைபாடு நீங்குகிறது என பக்தர்கள் மனதார நம்புகின்றனர்.

Advertisement

சப்தகன்னியர்களுள் ஒருவராக கெüமாரி கருதப்படுகிறார். கண்நோய் கண்டவர், அம்மை வந்தவர்கள் அம்மனை தூய உள்ளத்துடன் வணங்கி, தீர்த்தம் பெற்றுச்சென்றால் நோய் தீர்ந்து விடுகிறது என்பது பக்தர்களின் நம்பிக்கை.

மூலவர் கெüமாரியம்மன் கிழக்கு நோக்கி அமர்ந்துள்ளார். அவரின் இடதுபுறம் உள்ள சந்நிதியில் அறம் வளர்த்த நாயகி வீற்றிருக்கிறார். கெüமாரியின் திருமேனிக்கு முன்பு லிங்க வடிவில் கெüமாரியம்மனின் சுயம்பு மூர்த்தமும் உள்ளது. அதற்கு முதல் பூஜை செய்த பிறகே அம்பிகையின் திருமேனிக்கு வழிபாடுகள் நடைபெறுகிறது.

மூலவரின் வலது புறம் சமயக்குரவர்கள் சந்நிதியும், வெளிப்பிரகாரத்தில் விநாயகர், முருகன் வள்ளி தெய்வானைக்கு தனிசந்நிதிகளும் உள்ளன. சண்டீஸ்வர், தட்சிணாமூர்த்தியுடன் பைரவர், துர்கை, நவகிரகங்களுக்கும் இத்தலத்தில் தனி சந்நிதிகள் உள்ளன. முல்லை நதி திருக்கோயிலின் தீர்த்தமாகவும், தலவிருட்சமாக வேம்பும் உள்ளன.

முன் மண்டபத்தைக் கடந்து பிரதான வாசல் வழியாக உள்ளே நுழைந்தவுடன் கம்பத்தடி மண்டபம் அமைந்துள்ளது. இங்குதான் சித்திரை திருவிழாவுக்காக கம்பம் நடப்படுகிறது. அடுத்து மகா மண்டபமும், பிரகாரத்தில் தெற்கே விநாயகர், கன்னிமார் தெய்வம், வடக்கே நவகிரக மண்டபமும் அமைந்துள்ளது. காவல் தெய்வமாக கருப்பசாமி பிரதான முன் மண்டபத்தில் காட்சியளிக்கிறார்.

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் இரண்டாம் செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது. அதன்படி இந்த ஆண்டு சித்திரை விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில் மே 12 முதல் 19 வரை எட்டுநாள் பெருந்

திருவிழா நடைபெறவுள்ளது. கொடியேற்றம் நடந்தது முதல் திருவிழா முடியும் வரை பக்தர்களைப் போலவே அம்மனும்

விரதம் மேற்கொள்வது சிறப்பு.

அம்மனிடம் வேண்டிக் கொண்டவர்கள் பெரியாறு ஆற்றில் குளித்துவிட்டு அக்னிச் சட்டி, அலகு குத்துதல் , ஆயிரம் கண் பானை எடுத்து காணிக்கையாகச் செலுத்துதல் போன்ற நேர்த்திக்கடன்களைச் செய்கின்றனர். சிலர் உடல் முழுவதும் முல்லை ஆற்றின் கரையில் உள்ள சேற்றைப் பூசிக் கொண்டு சேற்றாண்டி வேடமிட்டு கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்கின்றனர்.

பூக்குழி எனும் தீமிதி திருநாளன்று நூற்றுக்கும் மேற்பட்டோர் கடுமையான விரதம் இருந்து பக்தி சிரத்தையுடன் அக்னி குண்டம் இறங்குகின்றனர். சித்திரைத் திருவிழாவின் போது முல்லை ஆற்றிலிருந்து தீர்த்தம் எடுத்துச் சென்று, அம்மன் கோயிலில் இருக்கும் அத்தி மரத்தாலான முக்கொம்புக்கு ஊற்றிவிட்டு, அதன்பிறகு அம்மனை வழிபடுவதை பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

காலை 5 முதல் மதியம் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும் இக்கோயில், தேனியிலிருந்து 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

- சோழவந்தான் ஜெனகராஜ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.