புதிய போப் தேர்வுக்காக வாடிகனில் குவியும் கார்டினல்கள்
போப் ஆண்டவர் பதினாறாம் பெனடிக்ட் தனது பதவியை ராஜிநாமா செய்ததை அடுத்து அடுத்த போப் ஆண்டவரைத் தேர்ந்தெடுக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
உடல்நலக்குறைவு காரணமாக போப் பதினாறாம் பெனடிக்ட் தனது பதவியை முறைப்படி ராஜிநாமா செய்தார். கடந்த 600 ஆண்டு கால வரலாற்றில் போப் ஒருவர் தனது பதவியை ராஜிநாமா செய்வது இதுவே முதல் முறை.இதையடுத்து உலகிலுள்ள 120 கோடி ரோமன் கத்தோலிக்க பிரிவைச் சேர்ந்த கிறிஸ்தவர்களுக்குத் தலைமையேற்று வழிநடத்தக் கூடிய அடுத்த போப் ஆண்டவரைத் தேர்ந்தெடுக்கும் பணிகள் தீவிரமாகியுள்ளன.
இதற்காக உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கார்டினல்களுக்கு வாடிகன் வருமாறு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Advertisement
இதையடுத்து வாடிகனில் கார்டினல்கள் உள்பட கத்தோலிக்க பாதிரியார்கள் பலர் குவிந்து வருகின்றனர்.
அங்குள்ள புனித சிஸ்டைன் ஆலயத்தில் கார்டினல்கள் பங்கேற்கும் சிறப்புக் கூட்டம் வரும் திங்கள்கிழமை (மார்ச் 4) தொடங்குகிறது. 115 கார்டினல்கள் ஆலயத்தில் நடைபெறும் சிறப்புக் கூட்டத்தை கத்தோலிக்க முறைப்படி தொடங்கி வைப்பர். வாக்குரிமை உள்ள 80 கார்டினல்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் புதிய போப் ஆண்டவர் தேர்ந்தெடுக்கப்படுவார்.