கார் குண்டு வெடிப்பு: பாகிஸ்தானில் 12 பேர் சாவு
பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் உள்ள அகதிகள் முகாமில் வியாழக்கிழமை நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பில்
பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் உள்ள அகதிகள் முகாமில் வியாழக்கிழமை நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பில் 12 பேர் உயிரிழந்தனர். இதில், 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ஆப்கானிஸ்தானிலிருந்து இடம் பெயர்ந்து வந்த அகதிகள் நவ்சேரா பகுதியில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
அகதிகளுக்குத் தேவையான உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வந்ததால், அதனைப் பெற மக்கள் கூட்டமாக நின்றிருந்தனர். அப்போது, முகாமின் நிர்வாகத் துறை கட்டடத்துக்கு முன்பு காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் உள்ளிட்ட 12 பேர் உயிரிழந்தனர் என்று முகாமின் பொறுப்பாளர் நூர் அக்பர் தெரிவித்தார்.
Advertisement
Advertisement
குண்டு வெடிப்பில் பலத்த காயமடைந்தவர்கள், உயர் சிகிச்சைக்காக பெஷாவர் நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சுமார் 35 கிலோ மதிப்புள்ள வெடிப்பொருள்கள் இந்த குண்டு வெடிப்பில் பயன்படுத்தியிருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. பயங்கரவாதிகளின் இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.
பாகிஸ்தானில், வரும் மே மாதம் 11-ம் தேதி பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலை சீர்குலைக்கும் நோக்குடன் பயங்கரவாதிகள் இத்தாக்குதலை நிகழ்த்தியிருக்காலம் என்று சந்தேகிக்கப்படுகிறது.