முகப்பு
உலகம்

குவாதமாலா முன்னாள் சர்வாதிகாரிக்கு 80 ஆண்டுகள் சிறை

குவாதமாலா நாட்டின் முன்னாள் சர்வாதிகாரி எஃப்ரெய்ன் ரியோஸ் மான்ட் மீதான இனப் படுகொலை மற்றும் போர்க்குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதையடுத்து, அவருக்கு நீதிமன்றம் 80 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி உள்ளது.

Updated On : 12 மே, 2013 at 3:53 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:10 PM

குவாதமாலா நாட்டின் முன்னாள் சர்வாதிகாரி எஃப்ரெய்ன் ரியோஸ் மான்ட் மீதான இனப் படுகொலை மற்றும் போர்க்குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதையடுத்து, அவருக்கு நீதிமன்றம் 80 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி உள்ளது.

இதுகுறித்து நீதிபதி ஜாஸ்மின் பரியோஸ் கூறுகையில், ""இனப் படுகொலை நிகழ்ந்ததற்கு ரியோஸ் மூல காரணமாக இருந்துள்ளது நிரூபணமாகி உள்ளது.

இனவெறி காரணமாக ஒரு குறிப்பிட்ட இனம் முழுவதையும் அழிக்க முயற்சி செய்துள்ளார். இதுபோல அவர் மீதான போர்க்குற்றமும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இனப்படுகொலை குற்றத்துக்காக 50 ஆண்டுகளும், போர்க்குற்றத்துக்காக 30 ஆண்டுகளும் தண்டனை வழங்கப்படுகிறது'' என நீதிபதி தெரிவித்தார்.

Advertisement

நீதிமன்றத்தில் குழுமியிருந்த போரினால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரும், உறவினர்களும் நீதிபதியின் தீர்ப்பைக் கேட்டதும் கைதட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இதன்மூலம், ரியோஸ் மான்ட் இனப்படுகொலைக்காக தண்டிக்கப்பட்ட முதல் லத்தீன் அமெரிக்கர் ஆகி உள்ளார். எனினும், இந்தத் தீர்ப்பை எதிர்த்து ரியோஸ் மேல் முறையீடு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பு என சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர். ஏனெனில், உலகிலேயே முதன்முறையாக இனப்படுகொலை வழக்கில் அதே நாட்டைச் சேர்ந்த ஒருவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளனர். இன, மத, அரசியல் காரணங்களுக்காக ஒரு குறிப்பிட்ட இன மக்களை ஒட்டுமொத்தமாக அழிக்க முயற்சி செய்ததாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்தத் தீர்ப்பைக் கேட்டதும் ரியோஸ் முகம் மாறி விட்டது. மேலும் ரியோஸின் வீட்டுக் காவலை ரத்து செய்த நீதிபதி, அவரை சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டார்.

கடந்த 1982இல் ஆட்சியைக் கைப்பற்றிய ரியோஸ், 1983ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தார். ராணுவத்துக்கும், இடதுசாரிகளுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்ற காலத்தில் இவரது ஆட்சிக் காலம் இருண்ட காலமாக கருதப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.