முகப்பு
உலகம்

காட்டுத் தீ: 19 தீயணைப்பு வீரர்கள் சாவு

அமெரிக்காவில் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த 19 தீயணைப்பு வீரர்கள் தீயில் கருகி உயிரிழந்தனர்.

Updated On : 2 ஜூலை 2013, 4:32 am IST
பகிர்:

அமெரிக்காவில் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த 19 தீயணைப்பு வீரர்கள் தீயில் கருகி உயிரிழந்தனர்.

அரிஸோனா மாகாணத்தின் யார்னெல் மலை, பிப்புள்ஸ் வேலி மற்றும் பீனிக்ஸின் வடபகுதியில் உள்ள வனப்பகுதியில் மின்னல் காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை தீப் பிடித்தது. அப்பகுதியில் பலத்த காற்று வீசியதால் தீ மளமளவென பரவிய சுமார் 2,000 ஏக்கர் பரப்பளவிலான காட்டுப் பகுதி முழுவதும் எரிந்து நாசமாகி விட்டது.

அப்பகுதியில் இருந்த 500 வீடுகள் சேதமடைந்தன. அங்கு வசித்தவர்கள் வேறு இடங்களுக்கு தப்பிச் சென்றுள்ளனர். தீ காரணமாக தென்மேற்குப் பகுதியில் அனல் காற்று வீசி வருவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 19 தீயணைப்பு வீரர்கள் தீயில் கருகி உயிரிழந்தனர்.

இதுகுறித்து, அரிஸோனா மாகாண வனத்துறை மண்டல செய்தித் தொடர்பாளர் மைக் ரெய்ச்லிங் கூறுகையில், ""காட்டுத் தீயை அணைக்கும் பணியில் 200 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். தீ கட்டுக்கடங்காமல் இருப்பதால் மேலும் 400 வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவர். 7 ஹெலிகாப்டர்கள் மூலம் தீயை அணைக்க வீரர்கள் போராடி வருகின்றனர்'' என்றார்.

அமெரிக்காவில் இந்த ஆண்டில் இதற்கு முன்பு 43 தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளதாக தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில் பணியின்போது மொத்தம் 83 தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தனர்.

கடந்த 1933ஆம் ஆண்டு நிகழ்ந்த ஒரு காட்டுத் தீ விபத்தின் போது பணியில் ஈடுபட்ட 29 வீரர்கள் உயிரிழந்தனர். அதற்குப் பிறகு இப்போதுதான் அதிக அளவிலான வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

இதுதவிர, 2001ஆம் ஆண்டு நிகழ்ந்த இரட்டை கோபுர தாக்குதல் சம்பவத்தின்போது 340 வீரர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் தென்மேற்குப் பகுதியில் ஜூன் மாதத்தில் வரலாறு காணாத வகையில் வெப்பம் நிலவி வருகிறது. 54 டிகிரி செல்சியஸ் அளவுக்கு கொளுத்தும் வெயில் காரணமாக கலிபோர்னியா, அரிஸோனா மற்றும் நியூமெக்ஸிகோ ஆகிய மாகாணங்களில் 40க்கும் மேற்பட்ட தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன.

ஒபாமா இரங்கல்

தீயணைப்புப் பணியின்போது உயிரிழந்த வீரர்கள் ஹீரோக்கள் என அதிபர் ஒபாமா புகழாரம் சூட்டி உள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அவர் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

""காட்டுத் தீ தொடர்பாக மாகாண அரசுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளோம். அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருகிறோம். தீ அணைப்புத் துறையில் மிகவும் திறமையான வீரர்கள் உள்ளனர். அவர்கள் சுயநலமின்றி நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக கடுமையாக போராடி வருகின்றனர். இவர்கள்தான் ஹீரோக்கள்'' என தான்சானியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஒபாமா கூறியுள்ளார்.

அமெரிக்காவின் அரிஸோனா மாகாணத்தின் யார்னெல் வனப் பகுதியில் கொழுந்து விட்டு எரியும் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதீயணைப்பு வீரர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.