முகப்பு
உலகம்

நிதி மோசடி குற்றவாளிக்கு 13,275 வருட சிறை: தாய்லாந்து நீதிமன்றம் 'பலே' தீர்ப்பு

நிதி நிறுவன மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிக்கு 13,275 வருடங்கள் சிறைத் தண்டனை விதித்து தாய்லாந்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Updated On : 30 டிசம்பர், 2017 at 3:38 PM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 11:58 PM

தாய்லாந்தில் நிதி நிறுவன மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிக்கு விநோத தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், செய்த குற்றத்தை குற்றவாளி ஒப்புக்கொண்டதற்காக அதில் 50 சதவீத தள்ளுபடியும் வழங்கப்பட்டுள்ளது.

தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த புடிட் கிட்டிட்ராடோலிக் (வயது 34), போன்ஸி என்ற நிதி நிறுவனத்தை துவக்கினார். அதில் முதலீடு செய்பவர்களுக்கு அதிக வட்டியுடன் பணம் வழங்கப்படும் என்று விளம்பரம் செய்துள்ளார்.

இதையடுத்து சுமார் 40,000 பேர் 160 மில்லியன் டாலர்களுக்கும் மேல் அந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தனர். அதேபோன்று ரியல் எஸ்டேட், அழகுசாதன வியாபாரம், பயன்படுத்தப்பட்ட கார் விற்பனை, ஏற்றுமதி என மற்றொரு நிறுவனத்தையும் உருவாக்கினார்.

Advertisement

அதில், அதிப்படியான வருவாய் மற்றும் அதிக உறுப்பினர்களை சேர்ப்பவர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்கப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டார். 

இந்நிலையில், நிதி மோசடி தொடர்பாக தாய்லாந்து நீதிமன்றத்தில் இவர் மீது 2,653 வழக்குகள் பதிவாகின. இதன் மீதான விசாரணை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையடுத்து பாங்காக்கில் பிடிபட்ட புடிட், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி புடிட்டுக்கு 13,275 வருடங்கள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும், தான் செய்த குற்றத்தை புடிட் ஒப்புக்கொண்ட காரணத்துக்காக தண்டனையில் 50 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்பட்டு 6,637 வருடங்கள் 6 மாதங்களாக தண்டனைக் காலம் குறைக்கப்பட்டது.

மேலும், புடிட் நடத்தி வந்த இரு நிறுவனங்கள் மீதும் தலா 20 மில்லியன் டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட 2,653 பேரிடமும் பெறப்பட்ட 17 மில்லியன் டாலர்கள் தொகைக்கு 7.5 சதவீத வருடாந்திர வட்டித்தொகையுடன் திருப்பி வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.