சீனாவில் 88 சதவீத பள்ளிகள் இணையதள வசதி பெற்றுள்ளதாக அந்த நாட்டின் கல்வி அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்தது.
இதுகுறித்து அந்த அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
ஆளும் கம்யூனிஸ்ட் அரசு தரமான கல்வியை மாணவர்களுக்கு இணையதளம் மூலமாக வழங்க கடந்த 2013-ஆம் ஆண்டில் முடிவெடுத்தது. இதன் மூலம், நாட்டின் அனைத்துப் பகுதி பள்ளிகளும் எந்த பேதமும் இன்றி நவீன கல்வி பெறலாம்.
அந்த வகையில் தற்போது சீனாவில் 88 சதவீத தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் சராசரியாக 100 மாணவர்களுக்கு 12 கணினிகள் உள்ளன. இந்த கணினிகளை கையாள்வது தொடர்பாக 94 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஆன்லைன் மூலம் கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை தற்போது 6.3 கோடியைத் தாண்டும் என்று சீன கல்வி அமைச்சகம் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.