ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு: 300 பேருக்கு மரண தண்டனை- இராக் நீதிமன்றம் தீர்ப்பு
ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 300க்கும் மேற்பட்டோருக்கு மரண தண்டனை விதித்து இராக் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவர்களில், வெளிநாட்டைச் சேர்ந்த ஏராளமானோரும் அடங்குவர்.
ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 300க்கும் மேற்பட்டோருக்கு மரண தண்டனை விதித்து இராக் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவர்களில், வெளிநாட்டைச் சேர்ந்த ஏராளமானோரும் அடங்குவர்.
இந்த வழக்குத் தொடர்பான விசாரணை, பாக்தாதில் உள்ள நீதிமன்றத்திலும், மொசூலில் உள்ள நீதிமன்றத்திலும் தனித்தனியாக நடைபெற்று வந்தன. இந்த வழக்குகள் மீதான விசாரணை முடிந்ததையடுத்து, இரு நீதிமன்றங்களும் தீர்ப்பை வெளியிட்டுள்ளன.
பாக்தாத் நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பில், 97 வெளிநாட்டினருக்கு மரண தண்டனையும், 185 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
மொசூல் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில், 212 பேருக்கு மரண தண்டனையும், 150 பேருக்கு ஆயுள் தண்டனையும், 341 பேருக்கு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
இராக் நாட்டின் உச்ச நீதிமன்ற செய்தித் தொடர்பாளர் அப்துல் சதார் பயராக்தர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராக் நாட்டின் பெரும்பாலான பகுதியை ஆக்கிரமித்திருந்த ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக அந்நாட்டு ராணுவம் போர் தொடுத்தது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளும், துருக்கி உள்ளிட்ட அண்டை நாடுகளும் ஆதரவளித்தன.
இதைத் தொடர்ந்து, ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பிடியில் இருந்த பகுதிகளில் பெரும்பாலானவற்றை இராக் ராணுவம் திரும்ப கைப்பற்றியது. ஒருசில பகுதிகளில் மட்டும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். இதையடுத்து, ஐ.எஸ். அமைப்புக்கு எதிரான போரில் வெற்றி பெற்றதாக இராக் நாடு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அறிவித்தது.