லண்டன்: நோபல் பரிசு பெற்ற இந்திய வம்சாவளி எழுத்தாளரான வி.எஸ்.நைபால் (85) லண்டனில் சனிக்கிழமையன்று காலமானார்.
வி.எஸ்.நைபால் மேற்கிந்திய தீவுகளில் உள்ள டிரினிடாட் நகரில் 1932-ம் ஆண்டு பிறந்தார். இவரது பெற்றோர் இந்தியாவில் இருந்து லண்டனில் குடியேறியவர்கள். அவரது முழுப்பெயர் முழுப் பெயர் வித்யாதர் சுராஜ் பிரசாத் நைபால் என்பதாகும்.
இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் ஆங்கில இலக்கியம் படித்த நைபால் லண்டனில் வசித்து வந்தார். 30-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். 1971-ம் ஆண்டு 'இன் ஏ ப்ரீ ஸ்டேட்' என்ற புத்தகத்துக்காக அவருக்கு புக்கர் விருது வழங்கப்பட்டது. 2001-ம் ஆண்டு நோபல் பரிசு கிடைத்தது. இந்தியாவைக் குறித்து நைபால் எழுதிய an area of darkness , A wounded civilization போன்ற புத்தகங்கள் இந்தியாவை தவறான கண்ணோட்டத்தில் சித்தரிப்பதாகக் கூறி சர்ச்சைகளை எழுப்பி பெரும் விவாதங்களையும் எழுப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் பத்திரிகையாளர் நதிரா அல்வியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட நைபால் லண்டனில் வசித்து வந்தார்.
இந்நிலையில் வி.எஸ்.நைபால் (85) லண்டனில் சனிக்கிழமையன்று காலமானதாக அவரது மனைவி நதிரா அல்வி தெரிவித்துள்ளார்.
நைபாலின் மறைவுக்கு சர்வதேச எழுத்தாளர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். செய்தி ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் நைபால் மறைவுக்கு இரங்கல் செய்திகள் வெளியாகியுள்ளன.