இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 24 பேரை போலீஸார் கைது செய்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.
ஈஸ்டா் திருநாளை முன்னிட்டு உலகம் முழுவதும் கிறிஸ்துவா்கள் தேவாலயங்களுக்குச் சென்று சிறப்பு பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோன்று இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
இந்நிலையில், கொழும்பு கொச்சிக்கடை அந்தோணியார் தேவாலயம் உட்பட 3 தேவாலயங்களில் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் வெடித்து சிதறியுள்ளன. அதே போன்று 2 நட்சத்திர விடுதிகள் மற்றும் தெம்மட்டகொடா என்ற இடத்தில் மஹவிலா உதயனா சாலை பகுதியில் ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. மொத்தம் 8 இடங்களில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு சம்பவங்களில் இதுவரை 220க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 450க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே இந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக இதுவரை 24 பேரை போலீஸார் கைது செய்துள்ளதாகவும், இலங்கையில் நடத்தப்பட்ட பெரும்பாலான குண்டுவெடிப்புகள் தற்கொலை படை தாக்குதல் மூலம் நிகழ்த்தப்பட்டவை என இலங்கை பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.