லண்டன் ஏவன்பீல்ட் குடியிருப்புத் தொடர்பான வழக்கில் போலி நம்பிக்கை பத்திரம் தாக்கல் செய்ததாக குற்றஞ்சாட்டி, வரும் 19ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மகள் மரியத்துக்கு ஊழல் எதிர்ப்பு நீதிமன்றம் அழைப்பாணை (சம்மன்) அனுப்பியுள்ளது.
பனாமா ஆவணங்கள் தொடர்பான வழக்கில் நவாஸ் ஷெரீஃபுக்கு தண்டனை விதித்து பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில், நவாஸ் ஷெரீஃப் மீது அந்நாட்டு ஊழல் எதிர்ப்பு நீதிமன்றமான தேசிய பொறுப்புடைமை அமைப்பு 3 வழக்குகளை பதிவு செய்தது. இதில் லண்டன் ஏவன்பீல்ட் குடியிருப்புத் தொடர்பான வழக்கும் ஒன்றாகும். லண்டனிலுள்ள ஏவன்பீல்ட் குடியிருப்பில் நவாஸ் குடும்பத்தினர் லஞ்சப் பணத்தின்மூலம் வீடு வாங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக மரியம், அவரது கணவர் சப்தார் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் நவாஸுக்கு 11 ஆண்டுகளும், மரியத்துக்கு 8 ஆண்டுகளும், சப்தாருக்கு ஓராண்டும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இதை எதிர்த்து தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம், மரியம், சப்தார் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்தது. இந்நிலையில், தேசிய பொறுப்புடைமை அமைப்பிடம் ஏவன்பீல்ட் குடியிருப்புத் தொடர்பான வழக்கில் மரியம் போலியான நம்பிக்கை பத்திரத்தை தாக்கல் செய்ததாகவும், ஆதலால் அவருக்கு எதிராக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பாகிஸ்தான் ஊழல் தடுப்பு அமைப்பு வலியுறுத்தியது. இதை விசாரித்த தேசிய பொறுப்புடைமை அமைப்பு நீதிபதி முகமது பஷீர், வரும் 19ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி மரியத்துக்கு சம்மன் அனுப்பும்படி உத்தரவிட்டார்.