துபை: சவூதி அரேபியாவில் சமூக நலப் பணிகளை முன்னின்று நடத்தி வந்த கேரளத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் நஸீர் வாடனப்பள்ளிக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த மூன்று வாரங்களாக கரோனா பாதித்தவர்களுக்கு முன்னின்று உதவிகளைச் செய்து வந்த நஸீருக்கு கரோனா தொற்று பாதிப்பு திங்கட்கிழமை உறுதி செய்யப்பட்டது
துபையில் கரோனா பாதித்து வீட்டிலேயே இருக்கும் நோயாளிகளுக்குத் தேவையான உதவிகளை நஸீர் வழங்கி வந்தார். துபையில் கரோனா பாதித்த பகுதிகளில் பணியாற்றிய காவல்துறைக்கும், துபை நல்வாழ்வுத் துறைக்கும், நஸீர் மற்றும் அவரது நண்பர்கள் குழு பல்வேறு உதவிகளை செய்து வந்தனர். கரோனா அறிகுறி இருப்பவர்களை வீட்டில் இருந்து மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்வது, அவர்களுடன் இருந்தவர்களை தனிமையில் இருக்க உதவி செய்வது என்ற பல்வேறு பணிகள் இதில் அடங்கும்.
கரோனா பாதித்தவர்கள் இருந்த பகுதிகளில் வாழும் மக்களுக்கு உணவு மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை வழங்கும் பணியிலும் நஸீர் ஈடுபட்டு வந்தார்.
நஸீர் மற்றும் அவரது நண்பர்களின் இந்த சிறப்பான சேவையைப் பாராட்டி, துபையில் உள்ள இந்திய தூதரகம் தனது டிவிட்டர் பக்கத்தில், இவர்களுக்கு பாராட்டுகளையும் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், நஸீருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதை அடுத்து, இந்திய மக்கள் பலரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். நஸீர் உடல்நிலை தேறி பூரண குணமடைய பிரார்த்தனைகளும் நடந்து வருகிறது.
இது குறித்து நஸீர் வாடனப்பள்ளி கூறுகையில், ஆரம்ப நாட்களில் உதவிக்குச் செல்லும் போது போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நான் மேற்கொள்ளாமல் விட்டுவிட்டேன். அதுவே இந்நிலைக்குக் காரணம் என்று தெரிவித்துள்ளார். இரண்டு வாரங்களாகவே எனக்கு குரலில் மாற்றம் இருந்தது. ஆனால் அதுதான் அறிகுறி என்று நான் நினைக்கவில்லை. தற்போது தலைவலி மற்றும் தொண்டை வலி ஏற்பட்டுள்ளது. இதுவரை காய்ச்சலோ மூச்சு விடுவதில் சிரமமோ இருக்கவில்லை என்று அந்த நாட்டு ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.