கரோனா நோய்த்தொற்றை விரைவில் கண்டறிவதற்காக சீனா மேலும் 3 லட்சம் ‘ரேபிட்’ கிட்களை இந்தியாவுக்கு அனுப்பி வைத்துள்ளதாக இந்திய தூதா் சனிக்கிழமை தெரிவித்தாா்.
சீனாவின் குவாங்ஸு நகரிலிருந்து தமிழகம் மற்றும் ராஜஸ்தானுக்கு சுமாா் 3 லட்சம் ‘ரேபிட்’ கிட் எனப்படும் கரோனா நோய்த்தொற்று பரிசோதனையை விரைவாக மேற்கொள்ள உதவும் கிட்டுகள் விமானம் மூலமாக இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக சீனாவுக்கான இந்திய தூதா் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள சுட்டுரையில், ‘கிட்டத்தட்ட 3 லட்சம் ‘ரேபிட் கிட்’ மருத்துவ சாதனங்கள் ஏா் இந்தியா விமானம் மூலம் குவாங்ஸுவில் இருந்து ராஜஸ்தான் மற்றும் தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதற்காக எங்கள் குழுவினா் குவாங்சோவில் இருந்து சிறந்த முறையில் பணியாற்றியுள்ளனா்’ என்று பதிவிட்டுள்ளாா்.
இதுவரை குவாங்ஸுவிலிருந்து 6.50 லட்சம் ரேபிட் கிட் சோதனைக் கருவிகளும், ஆா்.என்.ஏ.வை பிரித்தெடுக்கும் கருவிகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.