லண்டன்: பிப்ரவரி 20-ஆம் தேதி வரை இங்கிலாந்திலுள்ள இந்திய தூதரகத்தின் சேவைகள் ரத்து செய்யபடுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உலக நாடுகளிடையே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த கரோனா வைரசானது தற்போது உருமாற்றம் அடைந்து பரவி வருகிறது. முதலில் இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட இந்த வைரசானது தற்போது மேலும் பல நாடுகளிலும் கண்டறியப்பட்டு வருவது அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் பிப்ரவரி 20-ஆம் தேதி வரை இங்கிலாந்திலுள்ள இந்திய தூதரகத்தின் சேவைகள் ரத்து செய்யபடுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ‘இங்கிலாந்தில் பரவி வரும் உருமாறிய கரோனா வைரசினை கட்டுப்படுத்தும் பொருட்டு அரசு விதித்துள்ள தீவிர கட்டுப்பாடுகளைக் கருத்தில் கொண்டும், தூதரக சேவைகளைக் கோருபவர்களுக்கு உண்டாகக் கூடிய வைரஸ் பாதிப்பினை தடுக்கும் பொருட்டும், பிப்ரவரி 20-ஆம் தேதி வரை இங்கிலாந்திலுள்ள இந்திய தூதரகத்தின் சேவைகள் ரத்து செய்யப்படுகிறது.’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.