பயணத்தை முடித்துக் கொண்டு இலங்கையிலிருந்து புறப்பட்டது சீன உளவுக் கப்பல்
சீன உளவுக் கப்பல் இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை வந்தடைந்த நிலையில், தனது சர்ச்சைக்குரிய ஆறுநாள் பயணத்தை முடித்துக் கொண்டு இலங்கையிலிருந்து புறப்பட்டது.
சீன உளவுக் கப்பல் இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை வந்தடைந்த நிலையில், தனது சர்ச்சைக்குரிய ஆறுநாள் பயணத்தை முடித்துக் கொண்டு இலங்கையிலிருந்து புறப்பட்டது.
இந்தக் கப்பலின் இலங்கை பயணம், எந்நாட்டின் பாதுகாப்புக்கும் பாதிப்பை ஏற்படுத்தாது என சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்திருந்தது. ஆனாலும், இந்தக் கப்பலின் இலங்கைப் பயணம் இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவேப் பார்க்கப்பட்டது.
சீனாவின் உளவுக் கப்பலான ‘யுவான் வாங்-5’ கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது. அந்தக் கப்பலின் வருகைக்கு இந்தியாவும் அமெரிக்காவும் எதிா்ப்பு தெரிவித்திருந்த நிலையில், கப்பலின் வருகையை ஒத்திவைக்குமாறு சீனாவிடம் இலங்கை அரசு கோரியிருந்தது.
Advertisement
சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருடனும் மேற்கொள்ளப்பட்ட விரிவான பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து சீன உளவுக் கப்பலின் வருகைக்கு அனுமதி அளிக்கப்படுவதாக இலங்கை தெரிவித்தது. அதன்படி, சீன உளவுக் கப்பலானது அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில் வந்தடைந்தது. சரியாக ஆறு நாள்கள் அக்கப்பல் நிலைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், திங்கள்கிழமை இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்றது.
இது தொடா்பாக பெய்ஜிங்கில் சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் வாங் வென்பின் கூறுகையில், ‘இலங்கை அரசின் ஒத்துழைப்புடன் சீன கப்பல் அந்நாட்டில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. சா்வதேச விதிகளுக்கு உள்பட்டே யுவான் வாங் கப்பல் ஆராய்ச்சி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்நடவடிக்கைகள் எந்த நாட்டின் பாதுகாப்பையும் பொருளாதாரத்தையும் பாதிக்காது. எனவே, அக்கப்பலின் பயணத்தை எந்தவொரு மூன்றாவது நாடும் தடுக்க முயற்சிக்கக் கூடாது’ என்றாா்.
கப்பல் விவகாரம் குறித்து இலங்கை வெளியுறவு அமைச்சகம் கூறியிருந்ததாவது, ‘எரிபொருள் உள்ளிட்டவற்றை நிரப்புவதற்காக மட்டுமே சீன கப்பல் இலங்கை வந்துள்ளது. கப்பலுக்குத் தேவையான உதவிகளைச் செய்துதருமாறு சீன தூதரகம் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சீன கப்பல் விவகாரத்தில், அண்டை நாடுகளுடனான ஒத்துழைப்புக்கும் பாதுகாப்புக்கும் இலங்கை அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அம்பாந்தோட்டை துறைமுகத்தை ராணுவ நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்த சீன உளவுக் கப்பல் அனுமதிக்கப்படாது என இலங்கை அதிபா் ரணில் விக்ரமசிங்க ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.