கரோனா பாதிப்பு அதிகரிப்பால் சீனாவின் ஷாங்காய் உள்ளிட்ட தொழில் நகரங்கள் முழு அடைப்பு மூலம் முடக்கப்பட்டுள்ளன. இதனால், சீனாவின் ஏற்றுமதி கடந்த ஏப்ரல் மாதத்தில் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட சீனா, தற்போது கரோனா பாதிப்பை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. முக்கியமாக ஷாங்காய், ஹுபெய், ஜிலின், குவாங்டாக் மாகாணம், ஷான்ஸ்ஷி ஆகிய பகுதிகளில் தினசரி கரோனா பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வருகிறது.
அந்தப் பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகளை சீன அரசு அறிவித்துள்ளது. இதனால் மக்கள் கடுமையான இன்னல்களைச் சந்தித்து வருவதுடன், தொழில் வளம் மிக்க அந்தப் பகுதிகளில் உற்பத்தியும் வெகுவாக குறைந்துவிட்டது. இதனால் சீனாவின் ஏற்றுமதியிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த மாா்ச் மாதம் சீனாவின் ஏற்றுமதி 15.7 சதவீதம் அதிகரித்திருந்த நிலையில், ஏப்ரல் மாத்தில் இது 3.7 சதவீதமாக குறைந்துவிட்டது.
சீன அரசு கரோனாவை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில் தொழில் நகரங்களான ஷாங்காய் உள்ளிட்ட இடங்களில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இது தொழில் நிறுவனங்களுக்கும், முதலீட்டாளா்களும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
முக்கியமாக ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், மின்னணுப் பொருள் உள்ளிட்ட தொழில்கள் பாதிப்பைச் சந்தித்துள்ளன.
கடந்த 2 ஆண்டுகளாக உலகின் பல்வேறு நாடுகள் கரோனாவால் பேரிழப்புகளைச் சந்தித்து வந்த நிலையில், சீனாவில் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை. இந்நிலையில், இப்போது சீனாவில் மட்டும் கரோனா பரவல் மிக மோசமாக உள்ளது.