இலங்கை அதிபர் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க வெற்றி
இலங்கை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற்றுள்ளார்.
இலங்கை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற்றார்.
இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து மக்கள் போராட்டத்தால் அதிபர் கோத்தபய ராஜபட்ச அண்மையில் ராஜிநாமா செய்தாா். இதையடுத்து அந்நாட்டின் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றாா்.
இதனைத் தொடர்ந்து புதிய அதிபருக்கான தேர்தலில், இடைக்கால அதிபரும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்க, ஆளும் இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் அதிருப்தி எம்.பி. டலஸ் அழகம்பெரும, ஜனதா விமுக்தி பெரமுன தலைவா் அனுர குமார ஆகிய 3 போ் அதிபர் பதவிக்குப் போட்டியிட்டுள்ளனர்.
Advertisement
இந்நிலையில், இலங்கையின் புதிய அதிபரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாடாளுமன்றத்தில் இன்று காலை நடைபெற்றது. இந்த தேர்தலை இரண்டு எம்.பி.க்கள் புறக்கணித்தனர்.
இதையும் படிக்க | குட்கா ஊழல்: முன்னாள் அமைச்சர்கள், டிஜிபிக்களை விசாரிக்க தமிழக அரசுக்கு சிபிஐ கடிதம்
தொடர்ந்து நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், மொத்தம் பதிவான 223 வாக்குகளில் 4 வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. அதிகபட்சமாக ரணில் விக்கிரமசிங்க 134 வாக்குகள் பெற்று அதிபராக தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டலஸ் அழகம்பெரும 82 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார்.
கோத்தபய ராஜபட்சவின் பதவிக்காலமான நவம்பர் 2024 வரை ரணில் அதிபராக தொடர்ந்து செயல்படுவார். 6 முறை பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க, முதல்முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, இரண்டு முறை அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ரணில் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.